அமைப்புச்சார தொழிலாளர்களுக்கு பிரதமரின் ஓய்வூதிய திட்டம் அறிமுகம்
புதுச்சேரி: இது குறித்து புதுச்சேரி தொழிலாளர் துறை சமூக பாதுகாப்பு வாரிய தொழிலாளர் அதிகாரி கஸ்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; அமைப்புச்சார தொழிலாளர்களாக பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசின் வேலை வாய்ப்பு மற்றும் தொழிலாளர் துறை எல்.ஐ.சி., மூலம் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் என்ற திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. இத்திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது உள்ள அமைப்புச்சார தொழிலாளர்கள் பயனாளியாக சேரலாம். அவர்கள் ஊழியர் சேமநல நிதி, ஊழியர் காப்பீட்டு நிறுவனம் ஆகிய அமைப்புகளில் பயனாளியாக இருக்கக்கூடாது. பயனாளிகள் தங்களின் கணக்கு மூலம் ஒவ்வொரு மாதமும் இத்திட்டத்திற்கு பங்களிக்க வேண்டும். 60 வயது பூர்த்தியான உடன் பயனாளியின் வங்கி கணக்கிற்கு ஒவ்வொரு மாதமும் 3,000 ரூபாய் இத்திட்டத்தின் மூலம் ஓய்வூதியமாக வங்கியில் வரவு வைக்கப்படும். அமைப்புச்சார தொழிலாளர்கள் தங்களின் ஆதார் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்துடன் அருகில் உள்ள பொது சேவை மையத்தை அணுகி இத்திட்டத்தில் பயனாளியாக சேரலாம். புதுச்சேரியில் இயங்கும் அனைத்து பொது சேவை மையத்திலும் இத்திட்டத்தை செயல்படுத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நகரப்பகுதியில் உள்ள பொது சேவை மையத்தில், 15--01--2026 முதல் 15--02--2026 வரையும், கிராமப் பகுதியில் உள்ள பொது சேவை மையத்தில் 16--02--2026 முதல் 15--03--2026 வரையும் நடைபெற உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.