உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உணவுப் பொருட்கள் உற்பத்தி விளைநிலங்கள் குறைவதால் அபாயம்

உணவுப் பொருட்கள் உற்பத்தி விளைநிலங்கள் குறைவதால் அபாயம்

புதுச்சேரியில் கம்பு, கேழ்வரவு, பருத்தி, சோளம் போன்ற பயிர்களின் சாகுபடி பெருமளவில் குறைந்துவிட்டது.புதுச்சேரியில் கடந்த காலங்களில் பிரதான தொழிலாக விவசாயம் திகழ்ந்தது. அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக பல்வேறு வகையான பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன.நெல், கரும்பு, பருத்தி, சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டன. வாழை மற்றும் காய்கறிகள் போன்றவையும் பரவலாக பயிரிடப்பட்டன.அரசின் அலட்சியத்தால் விளைநிலங்கள் தற்போது படுவேகமாக குறைந்து விட்டன. 32 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் நடந்து வந்த சாகுபடி தற்போது 14 ஆயிரம் ஹெக்டராக படுபாதாளத்திற்கு சென்று விட்டது. குறிப்பாக பருத்தி, சோளம், கம்பு, கேழ்வரகு, உளுந்து, பயறு வகைகள் போன்றவை சாகுபடி நடந்த மானாவாரி நிலங்கள் பாலைவனமாகிவிட்டது.கடந்த 80-81ம் ஆண்டு புதுச்சேரி மாநிலத்தில் 1100 ஹெக்டர் பரப்பளவில் கம்பு பயிரிடப்பட்டது. அப்போது 2500 மெட்ரிக் டன் உற்பத்தி கிடத்தது. தற்போது வெறும் 24 ஹெக்டர் பரப்பளவில் 59 மெட்ரிக் டன் கம்பு மட்டுமே உற்பத்தியாகிறது.மேலும், 3300 ஹெக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்ட கேழ்வரகு தற்போது 43 ஹெக்டர் பரப்பளவில் சுருங்கி விட்டது. உற்பத்தியும் 97 மெட்ரிக் டன் அளவில் சரிந்து விட்டது.எண்ணை வித்துகள் உற்பத்தியும் படுவேகமாக குறைந்து வருகிறது. 5600 ஹெக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு, 11450 மெட்ரிக் டன் அளவிற்கு மணிலா உற்பத்தி செய்யப்பட்டது.தற்போது வெறும் 774 ஹெக்டர் பரப்பளவில் மட்டுமே மணிலா பயிர் சாகுபடி செய்யப்பட்டு, 2286 மெட்ரிக் டன் விளைச்சல் கிடைக்கிறது.இதேபோல் 550 ஹெக்டர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்ட எள் தற்போது 246 ஹெக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 142 மெட்ரிக் டன் மட்டுமே உற்பத்தி கிடைக்கிறது.பயறு வகைகளில் உற்பத்தியும் 3000 மெட்ரிக் டன்னில் இருந்து 1764 மெட்ரிக் டன்னாக குறைந்து விட்டது.இதுமட்டுமல்லாமல், 1150 ஹெக்டரில் பயிரிடப்பட்ட பருத்தி தற்போது 33 ஹெக்டர் பரப்பளவில் மட்டுமே பயிரிடப்பட்டு 165 மெட்ரிக் டன் மட்டுமே உற்பத்தி பெறப்படுகிறது.இந்தப் பயிர்களுக்கு மார்க்கெட்டில் 'டிமாண்ட்' உள்ளது. பராமரிப்பு செலவும் குறைவு என்பதால் அதிக லாபம் பார்க்க முடியும். இருந்தபோதும் விளைநிலங்கள் குறைந்ததால் சாகுபடியும் அதளபாதாளத்திற்குச் சென்று விட்டது.மானியம் கிடைப்பதால் நெல், கரும்பு ஆகியவை ஓரளவு தப்பி பிழைத்து வருகின்றன.கடந்த 1980ம் ஆண்டில், 28 ஆயிரத்து 515 ஹெக்டர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டது. அப்போது 67 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி உற்பத்தி செய்யப்பட்டது.இந்த பரப்பளவு தற்போது 21,697 ஹெக்டர் பரப்பளவாக குறைந்து, 60 ஆயிரத்து 321 மெட்ரிக் டன் உற்பத்தி மட்டுமே கிடைக்கிறது.புதுச்சேரியில் 2000 ஹெக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்ட கரும்பு தற்போது 1379 ஹெக்டர் பரப்பளவில் குறைந்துவிட்டது. கரும்பு உற்பத்தி 1 லட்சத்து 79 ஆயிரத்து மெட்ரிக் டன்னில் இருந்து, 1 லட்சத்து 17 ஆயிரத்து 600 மெட்ரிக் டன்னாக சரிந்து விட்டது.விளைநிலங்களைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், உணவு உற்பத்திக்கு முழுவதுமாக நின்று விடும். உணவுக்கு வெளிமாநிலங்களிடம் கையேந்தும் அவலம் ஏற்பட்டு விடும்.

நமது சிறப்பு நிருபர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ