உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி 35 பதக்கங்களை அள்ளிய புதுச்சேரி வீரர்களால் பெருமை

தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி 35 பதக்கங்களை அள்ளிய புதுச்சேரி வீரர்களால் பெருமை

புதுச்சேரியின் விளையாட்டு வரலாற்றில் இன்னொரு பொன்னான அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. தேசிய அளவிலான 63-வது ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில், புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர்கள் தங்களின் தன்னம்பிக்கை, கடின உழைப்பு மற்றும் அசைக்க முடியாத மன உறுதியால் 35 தேசிய பதக்கங்களை குவித்து, மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், கடந்த 5 முதல் 15 வரை நடைபெற்ற இப்போட்டியில், நாடு முழுவதும் இருந்து சிறந்த வீரர்கள் கலந்து கொண்டனர். இத்தகைய கடும் போட்டிகளுக்கு நடுவே, புதுச்சேரி ரோலர் ஸ்கேட்டிங் சங்கம் சார்பில் பங்கேற்ற வீரர்-வீராங்கனைகள் தங்களின் திறமையால் மின்னி, பதக்க மேடையில் புதுச்சேரியின் கொடியை உயர்த்தினர். போட்டிக் களத்தில் சக்கரங்கள் சுழன்ற ஒவ்வொரு நொடியிலும், வெற்றியின் கனவு உயிர்த்தெழுந்தது. நிதின் ஸ்டீவ் ஜாப்ஸ் தங்கம் வென்று தொடங்கிய பதக்க வேட்டை, சந்தோஷ் பெற்ற இரு தங்கங்கள், ஆந்யா, ஹர்ஷிதா, லோநாத், விஷ்ணுபிரசாத், நாவிக்பாலு, முஹம்மது அர்மான், கிரிதரன், கிரிதாசன் உள்ளிட்டோரின் தங்க, வெள்ளி, வெண்கலப் பதக்கங்களால் தொடர்ந்தது. மோனிஷா, கனிஷ்கா, பிரசாந்த், ஷிவன்ஷ் சுனில் ஜாதவ், சுபிக்ஷா, சாரதி, ஜெயஷிதா உள்ளிட்ட வீராங்கனைகள் வெண்கலப் பதக்கங்களைப் பெற்று அணியின் வெற்றிப் பட்டியலை மேலும் விரிவாக்கினர். மெர்லின் தனம் அர்ப்புதம் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை அள்ளி அனைவரின் பாராட்டையும் பெற்றார். இப்போட்டியின் மிகச் சிறப்பு அம்சமாக, மாற்றுத் திறனாளி சிறுவன் ரவிச்சந்திரன், தனது தளராத மன உறுதியால் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றார். இது வெற்றி என்பது உடல் வரம்புகளை மீறி மன உறுதியால் பெறப்படும் ஒன்று என்பதை உறுதியாக உணர்த்தியது. புதுச்சேரி அணியை, புதுச்சேரி ரோலர் ஸ்கேட்டிங் சங்க பொது செயலாளர் தாமஸ் திறம்பட வழிநடத்தினார். இந்தச் சாதனையை நிகழ்த்திய மாணவர்களுக்கு, சங்க நிறுவனர் திருவேங்கடம், தலைவர் பழனி மற்றும் சங்க உறுப்பினர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர். இதுகுறித்து சங்க தலைவர் பழனி கூறுகையில், 'தேசிய அளவில் 35 பதக்கங்களைப் பெற்ற இந்தச் சாதனை, புதுச்சேரி ரோலர் ஸ்கேட்டிங் வரலாற்றில் மறக்க முடியாத தருணம். வீரர்களின் மன உறுதி, பயிற்சியாளர்களின் அர்ப்பணிப்பு, பெற்றோர் மற்றும் நிறுவனங்களின் ஆதரவு ஆகியவை ஒன்றிணைந்ததாலேயே இத்தகைய வெற்றியை எட்ட முடிந்தது” என பெருமிதத்துடன் தெரிவித்தார். மேலும், சங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் முதல்வர் ரங்கசாமி, விளையாட்டுத் துறை அமைச்சர் நமச்சிவாயம், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., உள்ளிட்டோருக்கு நன்றியை தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி