எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு விண்ணப்பிக்க ரெடியா?ஓரிரு தினங்களில் அறிவிப்பு வெளியாகிறது
புதுச்சேரி: நீட் ரிசல்ட் வெளியாகியுள்ள சூழ்நிலையில் எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட அனைத்து மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க அனைத்து சான்றிதழ்களையும் மாணவர்கள் தயாராக வைத்து கொள்ள வேண்டும் என, சென்டாக் அறிவுறுத்தியுள்ளது. புதுச்சேரியில் நீட் தேர்வு எழுதிய 4,716 பேரில் 2,451 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் தேர்ச்சி 51.97 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. கடந்தாண்டை காட்டிலும் 0.72 சதவீதம் அதிகரித்துள்ளது. நீட் ரிசல்ட் வெளியாகியுள்ள சூழ்நிலையில் எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட அனைத்து மருத்துவ படிப்பிற்கு ஓரிரு தினங்களில் விண்ணப்ப அறிவிப்பு வெளியாக உள்ளது. தகவல் குறிப்பேடு ஒப்புதலுக்காக முதல்வர் ரங்கசாமிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் போது ஏற்படும் கடைசி நேரப் பதற்றத்தைத் தவிர்க்கவும், ஆவணச் சரிபார்ப்பில் காலதாமதத்தைத் தவிர்க்கவும், சான்றிதழ்களை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருக்க சென்டாக் அறிவுறுத்தியுள்ளது. பொதுவான சான்றிதழ்கள்:: விண்ணப்பிக்கும் மாணவர்கள் சமர்ப்பிக்கும் அனைத்துச் சான்றிதழ்களும் 2026 ஜனவரி 1ம் தேதிக்குப் பிறகு பெறப்பட்டதாக இருத்தல் வேண்டும். குடியிருப்பு, குடியுரிமை சான்றிதழுக்கும் இது பொருந்தும். சாதிச் சான்றிதழ்:: அகில இந்திய ஒதுக்கீடு அல்லது மத்திய அரசு நிறுவனங்களுக்கான சான்றிதழ்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. புதுச்சேரி மாநிலத்திற்கென வழங்கப்பட்ட சான்றிதழே அவசியம். வருமானச் சான்றிதழ், 01.04.2026 அன்றோ அல்லது அதற்குப் பிறகோ பெறப்பட்டதாக இருக்க வேண்டும். சிறப்பு இட ஒதுக்கீடு சான்றிதழ்கள்:: தகுதியுள்ள சிறப்பு இட ஒதுக்கீட்டு கீழ் விண்ணப்பிக்கும் மாணவர்கள் அந்தந்த துறைகளிடம் இருந்து முறைப்படி பெறப்பட்ட சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பாக மாற்றுத்திறனாளிகள், சுகாதார மற்றும் குடும்ப நல சேவைகள் இயக்குநரகத்தால் வழங்கப்பட்ட சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள் சைனிக் நலத்துறையிடம் இருந்து பெறப்பட்ட சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். விளையாட்டு வீரர்கள் கடந்த 5 ஆண்டுகளில் பெற்ற சான்றிதழ்கள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் சுதந்திரப் போராட்ட வீரர் பிரிவால் வழங்கப்பட்டதை சமர்ப்பிக்க வேண்டும். இதர இட ஒதுக்கீடுகள்:: பிராந்திய ஒதுக்கீட்டினை பொருந்தவரை காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் பகுதி மாணவர்கள் அந்தந்த பிராந்தியத்திற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும். விவசாயிகளின் வாரிசுகள், வருவாய்த்துறையிடம் இருந்து 01.04.2026க்கு பிறகு பெற்ற சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் படிப்புகளுக்கு கிராமப்புற இடஒதுக்கீடு உண்வு. எனவே மாணவர்கள் தாங்கள் கடைசியாகப் படித்த பள்ளித் தலைமையாசிரியரிடம் பெறப்பட்ட கிராமப்புற இட ஒதுக்கீடு சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். இ.டபுள்யூ.எஸ்:: பொருளாதாரத்தில் நலிந்த இ.டபுள்யூ.எஸ்., பிரிவினர் வருவாய்த்துறையிடம் இருந்து 01.04.2026க்கு பிறகு பெறப்பட்ட சான்றிதழ், தெலுங்கு மொழி சிறுபான்மையினர் மாற்றுச் சான்றிதழில் தாய்மொழி தெலுங்கு எனக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். எனவே, மாணவர்கள் இப்போதே தங்களுக்குத் தேவையான சான்றிதழ்களை புதுப்பித்து வைத்துக்கொள்வது அவசியம் என, சென்டாக் அறிவுறுத்தியுள்ளது. 2 விண்ணப்பம் போட்டால் எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் நீட் படிப்பிற்கு இரண்டு விண்ணப்பம் போட வேண்டாம். அப்படி விண்ணப்பித்தால் இரண்டு விண்ணப்பங்களும் ரத்தாகிவிடும் என சென்டாக் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.அரசு பள்ளி மாணவர் ஒதுக்கீடு: சென்டாக் சேர்க்கையில் 10 சதவீத இட ஒதுக்கீடு உண்டு. எனவே இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்க, நீட் படிப்புகளுக்கு 1-ம் வகுப்பு முதல் பிளஸ் 2ு வரை அரசுப் பள்ளியில் படித்ததற்கான மாற்றுச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.