உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வான்வழி தாக்குதல் போர் ஒத்திகை நிகழ்ச்சி: உயிருக்கு போராடியவர்களை மீட்டு சிகிச்சை

வான்வழி தாக்குதல் போர் ஒத்திகை நிகழ்ச்சி: உயிருக்கு போராடியவர்களை மீட்டு சிகிச்சை

புதுச்சேரி: வான்வழி தாக்குதலில், இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய மக்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்ற, போர் ஒத்திகை நிகழ்ச்சி லாஸ்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் நேற்று தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், நாடு முழுதும் வான்வழி தாக்குதல் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அனைத்து மாநிலங்களிலும், நேற்று போர்க்கால ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, லாஸ்பேட்டை ெஹலிபேடு சாலையில் நேற்று மாலை 4:10 மணி முதல் 4:30 மணி வரை ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

வான்வழி தாக்குதல்:

ஒலிம்பிக் உள் விளையாட்டு அரங்கத்தை வான்வழி மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில், கட்டடங்கள் தரைமட்டமாக இடிந்து விழுந்து, தீப்பற்றி எரிந்தது. இந்த தாக்குதலில், பொதுமக்கள் பலர் கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடினர். தீயணைப்பு துறை மீட்டு படை வீரர்கள் தீயை அனைத்தனர்.அதனை தொடர்ந்து, தீக்காயங்களுடன் போராடிய பொதுமக்களை மருத்துவக் குழுவினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவ முகாமிற்கு அழைத்து சென்றனர். பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க பள்ளமாக பகுதிகளில் படுத்து கொள்ளுமாறு சைரன் ஒலி பெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டது. ஒத்திகை நிகழ்ச்சி ஏற்பாடுகளை கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில், மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை சீனியர் எஸ்.பி., கலைவாணன் முன்னிலையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் செய்திருந்தனர். சபாநாயகர் செல்வம் இந்த நிகழ்ச்சியை பார்வையிட்டார்.நிகழ்ச்சியில், பேரிடர் மேலாண்மை துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஒத்திகை நிகழ்ச்சியை காண ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்தனர். இந்நிகழ்ச்சி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !