உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தாய்வழி சாதி சான்றிதழ் விவகாரத்தில் ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு: மேல் முறையீட்டிற்கு சென்றது புதுச்சேரி அரசு

தாய்வழி சாதி சான்றிதழ் விவகாரத்தில் ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு: மேல் முறையீட்டிற்கு சென்றது புதுச்சேரி அரசு

புதுச்சேரி: புதுச்சேரியைச் சேர்ந்த பூர்வீகத் தாய் வழியிலும் பிள்ளைகள் சாதிச் சான்றிதழ் மற்றும் இடஒதுக்கீட்டுச் சலுகைகளைப் பெற முழு உரிமை உண்டு என, ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. தந்தை வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக தாயின் பூர்வீக உரிமையை மறுப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என, நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. புதுச்சேரியைப் பூர்வீகமாகக் கொண்டு இடஒதுக்கீட்டுப் பிரிவைச் சேர்ந்த பெண்களைத் திருமணம் செய்த, வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஆண்களின் பிள்ளைகளுக்கு பூர்வீக நிலைக் சான்றிதழ் வழங்க புதுச்சேரி அரசு நிர்வாகம் மறுத்து வந்தது. தந்தையின் இருப்பிடத்தையே அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு இடம்பெயர்ந்தவர் சான்றிதழே வழங்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளும் அவர்களின் தாய்மார்களும் 26 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். அண்மையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்தியச் சமூகம் பாரம்பரியமாகத் தந்தைவழி அமைப்பைக் கொண்டது. எனவே சாதி அல்லது சமூக நிலை தந்தையின் வழியிலேயே தீர்மானிக்கப்பட வேண்டும் என, அரசு தரப்பில் வாதிக்கப்பட்டது. ஒரு மாநிலத்தில் இடஒதுக்கீடு பெறத் தகுதியுள்ள ஒருவர் மற்றொரு மாநிலத்திற்கு இடம்பெயரும்போது அதே சலுகையைக் கோர முடியாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையும், மத்திய அரசின் அறிவுறுத்தல்களையும் சுட்டிக்காட்டி பூர்வீக சான்றிதழ் தர அரசு மறுப்புத் தெரிவித்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யூ, தந்தை வழியில் மட்டுமே சாதிச் சான்றிதழ் தரப்படும் என்று கூறுவது அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 14, 15 மற்றும் 16 வழங்கும் பாலினச் சமத்துவத்திற்கு எதிரானது. பிள்ளைகள் புதுச்சேரியிலேயே பிறந்து, தாய் வாழும் சமூகச் சூழலிலும் பண்பாட்டிலும் வளர்ந்து அச்சமூகம் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ளும்போது, தந்தையின் இடம்பெயர்வைக் காட்டி தாயின் உரிமையைப் பறிக்கக் கூடாது என வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட ஐகோர்ட் நீதிபதி பரத்சக்ரவர்த்தி, பழமைவாத தந்தை வழிச் சமூகக் கோட்பாட்டைக் காட்டி பெண்களுக்குச் சம உரிமை மறுக்கப்படுவதை ஏற்க முடியாது. எனவே, புதுச்சேரியின் பூர்வீகத் தாயின் சாதி நிலையைக் கொண்டு பிள்ளைகளுக்கு எஸ்சி., எம்.பி.சி., ஓ.பி.சி., சான்றிதழ்களை வருவாய்த்துறை உடனடியாக வழங்க வேண்டும். புதுச்சேரி அரசின் கல்வி நிறுவனச் சேர்க்கை மற்றும் அரசுப் பணிகளில் பூர்வீக வாசிகளுக்கான முழு இடஒதுக்கீட்டுச் சலுகைகளையும் அப்பிள்ளைகள் பெற முழுத் தகுதியுடையவர்கள் என அதிரடியாக உத்தரவிட்டார். பெண்களுக்கான உரிமையையும் சமூக நீதியையும் நிலைநிறுத்தும் வகையில், இத்தீர்ப்பு, புதுச்சேரியில் நீண்டகாலமாக நிலவி வந்த சான்றிதழ் சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதேவேளையில் இந்த தீர்ப்பினை எதிர்த்து புதுச்சேரி அரசு சார்பில் தலைமை நீதிபதி உள்ளடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு முன் மேல்முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Natanasabapathy pillai
ஆக 31, 2026 20:28

ஐயா நீதி அரசரே பிரசவ கால விடுப்பு அரசு பெண் ஊழியர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறதே அது சமத்துவத்தை மீறியது ஆகாதா .


Ashokkumar Kp
ஆக 31, 2026 19:11

முன்மாதிரியான தீர்ப்பு பெண் சமத்துவத்தை உறுதி செய்கிறது


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை