முத்தியால்பேட்டையில் இன்று சூரசம்ஹாரம்
புதுச்சேரி: முத்தியால்பேட்டை சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவையொட்டி, வேல் வாங்குதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. முத்தியால்பேட்டையில் சுந்தர விநாயகர், வள்ளி, தெய்வானை சுப்ரமணிய சுவாமி, சித்தி விநாயகர் கோவிலில், 164ம் ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹார விழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, தினமும் காலை சிறப்பு அபிஷேகம், மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வாக, நேற்று காலை சிங்க முகா சூரன் புறப்பாடு, கழுமரம் நடும் நிகழ்ச்சியும், இரவு வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, இன்று ( 27ம் தேதி) மதியம் 2:30 மணிக்கு தாரகா சூரன் புறப்பட்டு, இரவு 7:00 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. வரும் 28ம் தேதி காலை 9:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 1ம் தேதி மாலை 5:00 மணிக்கு 108 சங்காபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை கந்த சஷ்டி சூரசம்ஹாரப் பெருவிழா குழுவினர் செய்து வருகின்றனர். நேற்றைய வேல் வாங்குதல் நிகழ்ச்சியை கோவிந்தசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் செய்தனர்.