கெட்டுப்போன இறைச்சி: உணவகத்தில் பறிமுதல்
புதுச்சேரி : புதுச்சேரி உணவகத்தில் வைத்திருந்த கெட்டுப்போன மாட்டிறைச்சியை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர்.மத்திய உணவு பாதுகாப்புத்துறை அமைச்சகம், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தை யொட்டி நாடு முழுதும் உள்ள உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் விற்பனையாகும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் காலாவதி தேதிகள், தயாரிப்பு இடங்களின் சுகாதார முறைகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு உள்ளது.அதையொட்டி, புதுச்சேரி உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி பாலகிருஷ்ணன் தலைமையில் நேற்று புதுச்சேரியில் உள்ள உணவகங்கள், பேக்கரிகளில் சோதனை நடத்தினர்.இதில், காமராஜர் சாலையில் உள்ள ஒரு அசைவ உணவகத்தில் பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த கெட்டு போன மூன்று கிலோ மாட்டிறைச்சியை பறிமுதல் செய்து அழித்தனர்.பஸ் நிலையம் அருகில் சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்த ஐந்து உணவகங்களுக்கு அறிவுறுத்தல் நோட்டீஸ் வழங்கி, 20 உணவுப் பொருட்களின் மாதிரிகளை ஆய்வு செய்வதற்காக எடுத்து சென்றனர்.இதேபோல் காரைக்காலில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரி ரவிச்சந்திரன் சோதனையில் ஈடுபட்டார்.