பாடப்புத்தகங்களையும் தாண்டி மாணவர்கள் படிக்க வேண்டும் செல்வகணபதி எம்.பி., பேச்சு
புதுச்சேரி: புதுச்சேரி எழுத்தாளர் அரிமதி இளம்பரிதி எழுதிய 10 நுால்களின் வெளியீட்டு விழா விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. ரத்தின விநாயகம் வரவேற்றார். தாசில்தார் செந்தில்குமார் தலைமை தாங்கினார். சிறைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். எழுத்தாளர் அரிமதி இளம்பரிதி எழுதிய, தமிழன் தலைநிமிர்ந்து வாழ, தமிழன் மேம்பட, அப்பா என்றோர் அரிமா, கனல், நன்றி அப்பா, தேசமே அழு, எழு, விழி, என் சிந்தனைகள், வலி, உங்களை உயர்த்தும் ஒரு நிமிடக் கதைகள், சிறுவர்களின் எண்ணங்களை மேம்படுத்தும் எழுச்சிக் கதைகள் முதலான 10 நுால்கள் வெளியிடப்பட்டன. செல்வகணபதி எம்.பி., அரிமதி இளம்பரிதியின் நுால்களை வெளியிட அரிமதி இளவேங்கை பெற்றுக் கொண்டார். விழாவில் செல்வகணபதி எம்.பி., பேசுகை யில், 'இலக்கியம் இல்லாமல் எந்த முன்னேற்றமும் இல்லை. மக்கள் விழிப்புணர்வு பெற நுால்களே காரணமாக உள்ளன. பாரதி, வ.உ.சி, வ.வே.சு அய்யர், முதலானவர்கள் எழுத்துக்களால் நாட்டின் விடுதலைக்கும், முன்னேற்றத்திற்கும் காரணமாக இருந்தனர். வாழ்வில் சாதிக்க விரும்பும் மாணவர்கள் பாடத்திட்டங்களோடு தொடர்புடைய நுால்களோடு வாசிப்பை நிறுத்தி விடுகின்றனர். அதையும் தாண்டி கவிதை, கதை முதலான நுால்களைப் படித்தால் படைப்பாற்றலை வளர்த்துக் கொள்ள முடியும். அறிவும், தன்னம்பிக்கையும் பெருகி சிறந்த நிலைக்கு உயர முடியும்' என்றார். இன்ஸ்பெக்டர் ரமேஷ் வாழ்த்திப் பேசினார். அரிமதி இளம்பரிதி ஏற்புரையாற்றினார். திருமுருகன் நன்றி கூறினார்.