சாலை நடுவே நின்ற தமிழக பஸ் இ.சி.ஆரில் போக்குவரத்து பாதிப்பு
புதுச்சேரி: இ.சி.ஆரின் நடுவே நின்ற தமிழக அரசு பஸ்சால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புதுச்சேரி இ.சி.ஆர்., வழியாக தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் பஸ் ஒன்று, கும்பகோணத்தில் இருந்து நேற்று புதுச்சேரி வந்தது. புதுச்சேரி பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு, இ.சி.ஆர் வழியாக சென்னைக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. லாஸ்பேட்டை இ.சி.ஆர்., உழவர்கரை தாசில்தார் அலுவலகம் அருகே வந்தபோது, பஸ் திடீரென பழுதாகி சாலையின் நடுவே நின்றது. இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலையின் நடுவே நின்றிருந்த பஸ்சை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே பஸ்சில் இருந்த பயணிகள் மாற்று பஸ் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 3 மணி நேரத்திற்கு பின், பஸ் பழுது சரிசெய்யப்பட்டு, தமிழக அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.