தமிழக கிட்னி மோசடி கும்பல் புதுச்சேரியிலும் கைவரிசை ஒரே நாளில் 4 பேருக்கு கிட்னி மாற்றம்
புதுச்சேரி: தமிழகத்தின் கிட்னி திருட்டு கும்பல் புதுச்சேரியிலும் கைவரிசை காட்டி வரும் 'பகீர்' தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ஏழை மக்களின் வறுமையை பயன்படுத்தி அவர்களின் கிட்னிக்கு சில லட்சம் ரூபாயை கொடுத்து விட்டு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வாயிலாக, பல கோடி ரூபாயை சுருட்டிய கும்பல் கடந்த சில வாரங்களுக்கு முன் தமிழகத்தில் சிக்கியது. இச்சம்பவத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனை அதிகாரிகள், ஊழியர்கள், ஏஜென்ட்களுக்கு தொடர்பு உள்ளதாகவும், தனியார் மருத்துவமனைகளை நடத்தும் அரசியல்வாதிகளும், இதன் பின்புலத்தில் உள்ளதாகவும் புகார் எழுந்தது. அதைதொடர்ந்து நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்களிடம் நடத்தப்பட்ட கிட்னி திருட்டு வெளிச்சத்திற்கு வந்ததால், திருச்சி மற்றும் பெரம்பலுார் மாவட்டங்களில், இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய டாக்டர்கள் இரண்டு பேர் தங்கள் தொழிலை புதுச்சேரிக்கு மாற்றியுள்ளனர். அதையொட்டி, புதுச்சேரியில் புறநகர் பகுதியில் உள்ள பிரபல மருத்துவமனையில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சையில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வரும் 'பகீர்' தகவல் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கும்பல், தமிழகத்தை போல இங்கேயும் கிட்னி தானம் கொடுப்பவர், பெறுபவரின் உறவினர் என போலி ஆவணங்களை தயார் செய்து மோசடியை அரங்கேற்றி வருகிறது. இதன் காரணமாக நேற்று ஒரே நாளில் 4 பேருக்கு கிட்னி மாற்றப்பட்டுள்ளது. புகார் எதுவும் வராததால், மோசடி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை என, சுகாதாரத்துறையினர் வேதனையாக கூறுகின்றனர். தமிழகத்தை சேர்ந்த மோசடி மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் சின்னஞ்சிறு மாநிலமான புதுச்சேரியை மையமாக வைத்து பல்வேறு மோசடி செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் கிட்னி மோசடி கும்பலும் இணைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே மாதத்தில் 10 கிட்னி மாற்றம்
கிட்னி மாற்ற வேண்டிய நபருக்கு அவரது உறவினர்கள் கிட்னி தானம் தரலாம். உறவினர் அல்லாதவரிடம் கிட்னியை தானம் பெற, அவரது ஒப்புதலை பெற்று, மாநில உறுப்பு மற்றும் திசு மாற்று (சோட்டோ) அமைப்பிடம் பதிவு செய்து, அனுமதி பெற வேண்டும். அதன்பிறகே, கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்ய அனுமதி கிடைக்கும். ஆனால், இந்த கும்பல், வறுமையில் உள்ளவரிடம் ஆசை வார்த்தை கூறி, அவரை நோயாளியின் உறவினர் என போலி ஆவணங்கள் தயார் செய்து மோசடி செய்து வருகிறது. தானம் பெறுபவரிடம் ரூ.30 லட்சத்தில் இருந்து 50 லட்சம் வரை வாங்கும் இந்த மோசடி கும்பல், தானம் கொடுப்பவருக்கு ரூ.3 லட்சத்தில் இருந்து 4 லட்சம் மட்டுமே கொடுக்கின்றனர். இவ்வாறு கடந்த மாதத்தில் மட்டும் 10 கிட்னிகளை இந்த கும்பல் மாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.