சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்றால் நடவடிக்கை உழவர்கரை நகராட்சி எச்சரிக்கை
புதுச்சேரி உழவர்கரை நகராட்சியில் தீபாவளியன்று சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்பனை செய்தால், கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, ஆணையர் சுரேஷ்ராஜ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: உழவர்கரை நகராட்சி பகுதிகளில் பண்டிகை தினங்களில் கூடுதலாக இறைச்சி கடைகள் திறக்கப்படுகின்றன. இந்த கடைகளில் சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்கப்படுகிறது. ஆடு, கோழிகள் பொதுமக்கள் பார்வையில் அறுக்கப்பட்டு, அதன் கழிவுகள் சாலையோர வாய்க்கால்களில் கொட்டப்படுகின்றன. இது சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. வரும், தீபாவளியன்று உழவர்கரை நகராட்சி பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளை ஆய்வு செய்ய ஊழியர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு இறைச்சி கடைகளை ஆய்வு செய்யும் போது, சாலையோரங்களில் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக கடைகள் வைக்கப்பட்டிருந்தாலோ பொதுமக்கள் பார்வையில் படுமாறு, ஆடு, கோழிகளை அறுத்தாலோ அவை பறிமுதல் செய்யப்படும்.கடை உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும். பொதுமக்கள் சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் இறைச்சியை வாங்க வேண்டாம்.இறைச்சி வாங்க வரும் போது, தடை செய்யப்பட்ட நெகிழி பைகளை தவிர்த்து துணிப்பைகள் மற்றும் பாத்திரங்களை பயன்படுத்தலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.