இலவச கல்வியில் மீனவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வலியுறுத்தல்
புதுச்சேரி: இலவச கல்வியில் மீனவ மக்களுக்குண்டான இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என, தி.மு.க., துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: கடந்த பட்ஜெட்டில் மிகவும் பின்தங்கிய மீனவ மக்களுக்கு, அட்டவணை இன மக்களுக்கு அளிப்பது போல் ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவச கல்வி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன். அதற்கு, முதல்வர் பரிசீலிக்கப்படும் என, வாக்குறுதி அளித்தார்.சமீபத்தில் மத்திய அமைச்சர் பங்கேற்ற மீனவர் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவிலும் மிகவும் பின்தங்கிய மீனவ மக்களுக்கு ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவச கல்வி வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை. நடப்பு கல்வி ஆண்டு துவங்க உள்ள நிலையில், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற அரசு ஆணை வெளியிட வேண்டும். முதல்வர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையில், மீனவ மாணவர்கள் உயர் கல்வியை தொடர முடியாமல் காத்துக் கொண்டிருக்கின்றனர். சரியான கணக்கெடுப்பு நடத்தி மீனவ மக்களுக்கு உண்டான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.