கால்நடை மருத்துவக்கல்லுாரி ஊழியர்கள் போராட்டம்
புதுச்சேரி: ராஜிவ்காந்தி கால்நடை மருத்துவக் கல்லுாரியில், சம்பளம் வழங்காததை கண்டித்து, ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.புதுச்சேரி குருமாம்பேட், ராஜிவ்காந்தி கால்நடை மருத்துவக் கல்லூரி யில், பணி புரியும் ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு, டிசம்பர் மாதத்தில் இருந்து சம்பளம் வழங்கவில்லை. இதனால், ஊழியர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கோரிக்கைக்கு பின், நிதி ஒதுக்கியும், இதுவரை, ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காமல் இருந்து வருகிறது.இது தொடர்பாக, தன்னாட்சி கல்லூரிகள், ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் கவர்னரிடம் மனு கொடுத்துள்ளனர்.மனு மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்ததால், கடந்த 22ம் தேதி, ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். அதனை தொடர்ந்து, ஊழியர்கள், நேற்று கல்லுாரி முன்பு, போராட்டம் நடத்தினர். ஊழியர்களின் சம்பள பிரச்னை தொடர்பாக, தன்னாட்சி கூட்டமைப்பு, தலைமையை அழைத்து, கால்நடைத் துறை அமைச்சர் மற்றும் துறை செயலர் பேச வேண்டும். இல்லையெனில், இன்று, உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும் என கூறினர்.