தமிழக அணி ரன் குவிப்பு: ஷாருக்கான், ஜெகதீசன் அரைசதம்
ஆமதாபாத்: ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் தமிழகத்தின் ஷாருக்கான், கேப்டன் ஜெகதீசன், சித்தார்த் அரைசதம் கடந்தனர்.குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடக்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 'டி' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், ரயில்வேஸ் அணிகள் விளையாடுகின்றன. ரயில்வேஸ் அணி முதல் இன்னிங்சில் 229 ரன் எடுத்தது. முதல் நாள் முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 19/0 ரன் எடுத்திருந்தது.இரண்டாம் நாள் ஆட்டத்தில் தமிழக அணியின் ஷாருக்கான், கேப்டன் நாராயண் ஜெகதீசன் அரைசதம் கடந்தனர். முதல் விக்கெட்டுக்கு 137 ரன் சேர்த்த போது ஷாருக்கான் (86) அவுட்டானார். விஜய் சங்கர் (11) நிலைக்கவில்லை. ஜெகதீசன் (56) நம்பிக்கை தந்தார். பிரதோஷ் ரஞ்சன் பால் (38) ஓரளவு கைகொடுத்தார். ஆன்ட்ரி சித்தார்த் (78), அரைசதம் விளாசினார். ஆட்டநேர முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 324 ரன் எடுத்திருந்தது. முகமது அலி (37), அஜித் ராம் (6) அவுட்டாகாமல் இருந்தனர். ரயில்வேஸ் சார்பில் குணால் யாதவ், ஷிவம் சவுத்தரி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
சபாஷ் ஷமி
இந்துாரில் நடக்கும் 'சி' பிரிவு லீக் போட்டியில் மத்திய பிரதேசம், பெங்கால் அணிகள் விளையாடுகின்றன. கணுக்கால் காயத்தில் இருந்து மீண்ட இந்தியாவின் முகமது ஷமி, பெங்கால் அணிக்காக விளையாடுகிறார். முதல் இன்னிங்சில் பெங்கால் 228, மத்திய பிரதேசம் 167 ரன் எடுத்தன. பெங்கால் சார்பில் வேகத்தில் மிரட்டிய ஷமி, 19 ஓவரில், 54 ரன் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் சாய்த்தார். இதில் 4 'மெய்டன் ஓவர்' உட்பட 90 'டாட் பால்' அடங்கும். இரண்டாவது இன்னிங்சிலும் சிறப்பாக பந்துவீசி உடற்தகுதி, 'பார்மை' நிரூபிக்கும் பட்சத்தில், ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள 'பார்டர்-கவாஸ்கர் டிராபி' டெஸ்ட் தொடரில் ஷமி பங்கேற்கலாம்.