பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் 100 மீ., ஓட்டத்தில் செயின்ட் லுாசியா வீராங்கனை ஜூலியன் ஆல்பிரட் தங்கம் வென்றார்.பிரான்சில் நடக்கும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில், பெண்களுக்கான 100 மீ., ஓட்டம் நடந்தது. உலகின் 'மின்னல் வேக' வீராங்கனை யார் என்று தீர்மானிக்கும் இப்போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு நிலவியது.ஒலிம்பிக் 100 மீ., ஓட்டத்தில் 2 தங்கம் (2008, 2012), ஒரு வெள்ளி (2020), ஒரு வெண்கலம் (2016) கைப்பற்றிய ஜமைக்காவின் ஷெல்லி-ஆன் பிரேசர்-பிரைஸ், காலில் ஏற்பட்ட காயத்தால் அரையிறுதியில் பங்கேற்கவில்லை. இதனால் பைனலில், 'நடப்பு உலக சாம்பியன்' அமெரிக்காவின் ஷாகாரி ரிச்சர்ட்சன் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில் லேசான மழையில் நடந்த பைனலில் 'மின்னல் வேகத்தில்' சீறிப்பாய்ந்த செயின்ட் லுாசியாவின் ஜூலியன் ஆப்பிரட், பந்தய துாரத்தை 10.72 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்து அனைவரையும் வியப்படையச் செய்தார். இதன்மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் செயின்ட் லுாசியா நாட்டிற்கு முதல் பதக்கத்தை பெற்றுத்தந்தார்.அமெரிக்காவின் ஷாகாரி ரிச்சர்ட்சன், இலக்கை 10.87 வினாடியில் அடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். மற்றொரு அமெரிக்க வீராங்கனை மெலிசா ஜெபர்சன் (10.92 வினாடி) வெண்கலத்தை தட்டிச் சென்றார்.
முதல் பதக்கம்
வெஸ்ட் இண்டீசின் கிழக்கு கரீபியனில் உள்ள ஒரு தீவு நாடு செயின்ட் லுாசியா. இங்கு, 1,80,000 பேர் வசிக்கின்றனர். பாரிஸ் ஒலிம்பிக்கில் செயின்ட் லுாசியா சார்பில், தடகளத்தில் 2, படகு போட்டி, நீச்சலில் தலா ஒருவர் என 4 பேர் பங்கேற்கின்றனர். கடந்த 1996ல் நடந்த அட்லாண்டா ஒலிம்பிக்கில் செயின்ட் லுாசியா முதன்முறையாக பங்கேற்றது. தற்போது 8வது முறையாக (1996-2024) ஒலிம்பிக்கில் விளையாடுகிறது. இதுவரை 36 பேர் செயின்ட் லுாசியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்றனர். இதில் ஜூலியன் ஆல்பிரட் மட்டும் பதக்கம் பெற்றுத்தந்தார்.