சிக்கலில் சிம்ரன் சர்மா * பறிபோகுமா பாரா தடகள பதக்கம்
புதுடில்லி: இந்திய பாரா தடகள வீராங்கனை சிம்ரன் சர்மா 25. பார்வைக்குறைபாடு உள்ளவர். இவருக்கு வழிகாட்டியாக ('கைடு') ஒருவர் இணைந்து ஓடிவருவார். பாரிஸ் பாராலிம்பிக்கில் (2024), சிம்ரன் சர்மா, 'கைடு' அபே சிங் உதவியுடன் வெண்கலம் (200 மீ.,) வென்றார். சமீபத்தில் டில்லியில் நடந்த உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில், சிம்ரனுக்கு 'கைடாக' உமர் செய்பி செயல்பட்டார்.100 மீ., ஓட்டத்தில் தங்கம், 200 மீ., ஓட்டத்தில் வெள்ளி என இரு பதக்கம் வெல்ல, சிம்ரன், உமர் செய்பி என இருவருக்கும் பதக்கம் வழங்கப்பட்டது. தவிர, கடந்த செப்டம்பர் மாதம் நடந்த டில்லி மாநில தடகளத்தில் இந்த கூட்டணி தங்கம் (200 மீ.,) வென்றிருந்தது. அப்போது நடந்த பரிசோதனையில் 'கைடு' உமர் செய்பி, தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரிய வந்தது. அடுத்து 'பி' சாம்பிள் சோதனை முடிவுக்காக காத்திருக்க வேண்டும். இதிலும் உறுதியாகும் பட்சத்தில், சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி விதிப்படி, உலக பாரா தடகளத்தில் சிம்ரன் வென்ற தங்கம், வெள்ளி பதக்கங்களை பறி கொடுக்க நேரிடலாம்.