கிணற்றில் விழுந்த தாயை காப்பாற்ற முயன்ற மகன் பலி
கீழப்பழுவூர்:கிணற்றில் தவறி விழுந்த தாயை காப்பாற்ற குதித்த மகன், நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.அரியலுார் மாவட்டம், திருப்பெயர் கிராமத்தை சேர்ந்தவர் பிரேம்குமார் மனைவி சூர்யா, 27. இவர், தன் மகன் ரட்சகன், 11, என்பவருடன் வயல்பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார்.அப்போது, கன்றுக்குட்டி ஒன்று கிணற்றுக்கு அருகில் சென்றதை பார்த்த சூர்யா, கன்றுக்குட்டியின் கயிற்றை பிடித்து இழுத்ததில், கன்றுடன் சேர்ந்து அவரும் கிணற்றில் விழுந்து உள்ளார்.இதை பார்த்த ரட்சகன், தாயை காப்பாற்றும் எண்ணத்தில் உடனடியாக கிணற்றில் குதித்தார். சூர்யாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், நீச்சல் தெரியாததால் ரட்சகன், நீரில் மூழ்கி உயிரிழந்தார்.கீழப்பழுவூர் போலீசார், ரட்சகன் சடலத்தை மீட்டனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.