அச்சிறுபாக்கம் வட்டார தடகளம் அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்
செய்யூர், அச்சிறுபாக்கம் கல்வி வட்டாரத்திற்கு உட்பட்ட மேல்மருவத்துார் ஆதிபராசக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பாரதியார் பிறந்த நாள் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கு வட்டார அளவிலான தடகளப் போட்டிகள் நேற்று நடந்தன.இதில், அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என, மொத்தம் 25 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.மாணவர்களுக்கான யு - 14 வயது பிரிவு, 600 மீட்டர் ஓட்டத்தில், அச்சிறுபாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் யஷ்வந்த் வெற்றி பெற்றார்.யு - 17 வயது பிரிவு, 1,500 மீட்டர் ஓட்டத்தில், அதே பள்ளி மாணவர் அஜய்யும், 3,000 மீட்டர் ஓட்டத்தில் ஜெகதீஷ்வரனும் வென்றனர். குண்டு எறிதலில், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிரசன்னா வெற்றிபெற்றார்.யு - 19 வயது பிரிவு, 800 மீட்டர் ஓட்டத்தில், சூணாம்பேடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் நரேஷ்குமார், 1,500 மீட்டர் ஓட்டத்தில், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் சத்தியசுந்தரமூர்த்தி ஆகியோர் வென்றனர்.அதேபோல், 3,000 மீட்டர் ஓட்டத்தில், தொழுப்பேடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன் பிரபஞ்சன், குண்டு எறிதலில் சூணாம்பேடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் அஜித்குமார் ஆகியோர் வென்றனர்.மாணவியருக்கான யு - 14 வயது பிரிவு, 600 மீட்டர் ஓட்டத்தில், ஆண்டார்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி இந்துமதியும், குண்டு எறிதலில், கடப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி அஷ்வினியும் வென்றனர்.யு - 17 வயது பிரிவு, 800 மீட்டர் ஓட்டத்தில், கடப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி தேஜஸ்ரீ, 1,500 மீட்டர் ஓட்டத்தில், அதேபள்ளி மாணவி வேல்விழி ஆகியோர் வென்றனர்.அதேபோல், 3,000 மீட்டர் ஓட்டத்தில், ஆண்டார்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி மலர்விழியும், குண்டு எறிதலில், அச்சிறுபாக்கம் செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி காயத்ரியும் வென்றனர்.யு - 19 வயது பிரிவு, 800 மீட்டர் ஓட்டத்தில், வெண்ணாங்குப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி தர்ஷினியும், 1,500 மீட்டர் ஓட்டத்தில், அதே பள்ளி மாணவி திவ்யலட்சுமியும் வென்றனர்.அதேபோல், 3,000 மீட்டர் ஓட்டத்தில், கடப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஹேமலதா, குண்டு எறிதலில், சூணாம்பேடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி சுபஸ்ரீயும் வென்றனர்.இதில் வெற்றி பெற்ற மாணவ- - மாணவியர், அடுத்த கட்டமாக மாவட்ட அளவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.