காப்பகத்திற்கான மண் பாதையால் மாற்றுத்திறனாளி மாணவர்கள் அவதி
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் பகுதி சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச்சாலையில், வட்டார வளர்ச்சி அலுவலக வளாகம் அமைந்துள்ளது.வளாகத்தின் உள்ளே, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான பகல் நேர காப்பகம், வட்டார வள மையம், புள்ளியல் துறை மற்றும் நீர் பாசன பிரிவு அலுவலகம் ஆகியவை உள்ளன.மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான பகல் நேர காப்பகத்தில், 25 குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை, மண்பாதை வழியாக அழைத்துச் சென்று, காப்பகத்தில் விட்டுவிட்டு வருகின்றனர்.மழை மற்றும் வெயில் காலங்களில், மண்பாதை வழியாக இருசக்கர வாகனத்தில் செல்லும் போது, மண்ணில் சிக்கி கீழே விழுகின்றனர்.இருசக்கர வாகனங்களில் அலுவலகத்திற்குச் செல்வோர், மிகுந்த அவதியடைகின்றனர்.மேலும், அப்பகுதியில் புதர்கள் நிறைந்து, பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.எனவே, புதரை அகற்றவும், மண் பாதையை சிமென்ட் சாலையாக அமைக்கவும் ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.