| ADDED : ஜூலை 09, 2024 09:55 PM
மறைமலை நகர்:செங்கல்பட்டு -- திருவள்ளூர் தடத்தில், சிங்கபெருமாள் கோவில் வழியாக தடம் எண்: 82சி என்ற அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்த தடத்தில் சிங்கபெருமாள் கோவில், தெள்ளிமேடு, ஆப்பூர், சேந்தமங்கலம், வடக்குபட்டு கூட்டு சாலை, ஒரகடம் உள்ளிட்ட முக்கிய பேருந்து நிறுத்தங்கள் உள்ளன.இதில், ஆப்பூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஆப்பூர், தாசரி குன்னத்தூர், வளையகரணை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து, ஒரகடம் அடுத்த மாத்தூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, 50க்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியர் சென்று வருகின்றனர். தினமும் காலை 8:00 - 9:00 மணி வரை இந்த வழியாக செல்லும் அரசு பேருந்துகள் ஆப்பூர் நிறுத்தத்தில் நின்று செல்லாததால் மாணவ -- மாணவியர் கடும் அவதியடைந்து வந்தனர்.இதுகுறித்து, நம் நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, நேற்று காலை தெள்ளிமேடு, ஆப்பூர் உள்ளிட்ட நிறுத்தங்களில் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பயணியரிடம் விசாரணை நடத்தினர்.இதை தொடர்ந்து, நேற்று முன்தினம் ஆப்பூர் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற அரசு பேருந்து ஓட்டுனர் யுவராஜ் மற்றும் நடத்துனர் பாஸ்கர் ஆகியோரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்து துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.