மருத்துவமனை வளாகத்தில் முதியவர் சடலம் மீட்பு
செங்கல்பட்டு : செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு கட்டடத்தின் பின்புறம் உள்ள காலி இடத்தில், முதியவர் சடலம் கிடப்பதாக, செங்கல்பட்டு நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், முதியவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், இறந்து கிடந்த முதியவர், திருப்போரூர் அடுத்த மானாமதி கிராமத்தை சேர்ந்த தம்பிரான், 70, என்பதும், நேற்று முன்தினம் உடல்நல குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் தெரியவந்தது.மேலும், நள்ளிரவில் முதியவர் மாயமான நிலையில், காலையில் மருத்துவமனை வளாகத்தில் இறந்து கிடந்ததும் தெரியவந்தது. தம்பிரான், உடல்நிலை சரியில்லாததால் இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.