உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாலை, நடைபாதையில் ஆக்கிரமிப்புகள் மறைமலை நகரில் பாதசாரிகள் அவஸ்தை

சாலை, நடைபாதையில் ஆக்கிரமிப்புகள் மறைமலை நகரில் பாதசாரிகள் அவஸ்தை

மறைமலை நகர்:மறைமலை நகர் நகராட்சியில், 21,000த்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள், 500க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.மறைமலை நகர் பஜார் வீதியில் உள்ள கடைகளுக்கு, சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து செல்கின்றனர்.சாலையோரம் உள்ள நடைபாதைகளுக்கு, மறைமலை நகர் நகராட்சி சார்பில், 'பேவர் பிளாக்' கற்களால் நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. கடைகாரர்கள், நடைபாதையை ஆக்கிரமித்து பொருட்களை வைத்து, விற்பனை செய்து வருகின்றனர்.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:மறைமலை நகர் என்.ஹெச்., - 1, 2, 3, ஆகிய பகுதிகளில், நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, திருவள்ளூர் சாலை, எம்.ஜி.ஆர்., சாலை, பாவேந்தர் சாலை முழுதும் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது.வாகனங்களை நிறுத்தவும், விளம்பர பலகைகள் வைக்கவும் நடைபாதையை பயன்படுத்துகின்றனர்.அதே நடைபாதையில் அரசு துறைகள் சார்பில் தண்ணீர் தொட்டி, மின்மாற்றி உள்ளிட்டவையும் வைக்கப்பட்டு உள்ளன.அதனால், நடக்க வழியின்றி பாதசாரிகள் சாலையில் செல்ல வேண்டியதாகிறது. அப்போது, அவ்வழியே வேகமாக செல்லும் வாகனங்களில் அடிபடுவதும் நடக்கிறது.தொழிற்சாலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள், அண்ணா சாலையில் திரும்ப முடியாத சூழல் உள்ளது.உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள், எம்.ஜி.ஆர்., சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.பேருந்து நிலையம் அருகில், வரிசையாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால், சாலை குறுகலாகி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.உள்ளூரைச் சேர்ந்த வணிகர் சங்க நிர்வாகி ஒருவர், கணிசமான தொகையை பெற்றுக்கொண்டு, தள்ளுவண்டி கடைகள், பழக்கடைகள் வைக்க, நடைபாதையை ஒதுக்கி தருகிறார். பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கடைக்காரர்கள் அட்டூழியம்

நடைபாதையை ஒட்டியுள்ள கடைக்காரர்கள், கடையின் முன் பகுதியில் உள்ள இடத்தை, தரை வாடகைக்கு விட்டு வருமானம் பார்க்கின்றனர். இதனாலும், நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்து வருகின்றன.சாலை ஓரம் நிறுத்தப்படும் சரக்கு வாகனங்கள், ஊழியர்களை ஏற்றிச்செல்லும் தனியார் நிறுவன பேருந்துகளின் உரிமையாளர்களிடம், கமிஷன் பெற்றுக் கொண்டு போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை.தவிர, இப்பகுதி வணிகர்கள், அங்குள்ள வணிக சங்கங்களின் உறுப்பினர்ளாக இருப்பதாலும், நடவடிக்கை எடுக்க முடிவதில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ