சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய வனத்துறையின் பழைய கட்டடங்கள்
மறைமலை நகர்:மறைமலை நகர் ரயில்வே கேட் - ஆப்பூர் செல்லும் சாலையோரம், மாநில ஊரக வளர்ச்சி நிறுவனம் எதிரில் காப்புக் காடுகள் உள்ளன. இந்த காப்பு காடுகளை பராமரிக்கும் வன அலுவலர்கள், காடுகளில் ரோந்து பணி மேற்கொண்ட பின், ஓய்வெடுக்க இரண்டு அலுவலகங்கள் 1962ல் கட்டப்பட்டன.இந்த கட்டடங்கள், நாளடைவில் பயன்பாடு இல்லாமல் போனது. தற்போது, அவை முழுதுமாக சிதிலமடைந்து, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளன.கட்டடங்களில் இருந்த கதவு, ஜன்னல் உள்ளிட்டவை மாயமானதால், இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.இது குறித்து, இந்த பகுதியை சேர்ந்த பெண்கள் கூறியதாவது:மறைமலை நகர் பகுதியில் உள்ள தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று, இரவு நேரங்களில் திரும்பும் போது, இந்த பகுதியில் அமர்ந்து சிலர் மது அருந்திக்கொண்டு இருக்கின்றனர்.அதுபோன்ற நேரங்களில், அச்சத்துடன் இந்த பகுதியை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. கடந்த 2ம் தேதி இரவு, மர்ம கும்பல் இளைஞர்களை வழிமறித்து, இந்த கட்டடத்தின் பின்புறம் அழைத்து சென்று தாக்கி பணம் பறித்து சென்றனர். மேலும், பிளாஸ்டிக் குப்பையை வனப்பகுதியில் வீசி செல்வதால், அவை வன விலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.இந்த கட்டடங்கள், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய நிலையில் உள்ளன. ஆபத்தை உணராமல், காதலர்களும் தனிமையில் பேச, இந்த கட்டடத்தை பயன்படுத்துகின்றனர்.எனவே, பொது மக்கள் மற்றும் வன விலங்குகளுக்கு பாதிப்பாக உள்ள இரண்டு பாழடைந்த கட்டங்களையும் இடித்து அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.வனப்பகுதியில் உள்ள இந்த இரண்டு கட்டடங்களும், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கட்டடம் பாழடைந்து உள்ளது. இடிந்து பாழாகியுள்ள இந்த கட்டடங்களை அகற்ற, மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு, வனத்துறை மற்றும் காவல் துறை சார்பில் கடிதம் அளிக்கப்பட்டு உள்ளது.- வனத்துறை அதிகாரி,மறைமலை நகர்.