பல்லாவரம்:பல்லாவரத்தில், கன்டோன்மென்ட் பூங்காவை ஒட்டி, ஸ்ரீ குலாப்சந்த் ஜெயின் கன்டோன்மென்ட் மருத்துவமனை இயங்கி வருகிறது. 1954ம் ஆண்டு, காமராஜர் முதல்வராக இருந்த போது, இம்மருத்துவமனை திறக்கப்பட்டது. இங்கு, பொது சிகிச்சை, ஆயுஷ், ஆய்வகம், மருந்தகம், பிசியோதெரபி ஆகிய வசதிகள் உள்ளன. 20 படுக்கை வசதி உடைய பிரசவ வார்டும் உள்ளது. தினம் 100- 150 நோயாளிகள் வந்து செல்கின்றனர்.இங்கு, சுக பிரசவம் மட்டுமே பார்க்கப்படுகிறது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், குரோம்பேட்டை அல்லது எழும்பூருக்கு கர்ப்பிணியரை அனுப்பி விடுகின்றனர்.அதனால், கர்ப்பிணியரின் வசதிக்காக இங்கு, அறுவை சிகிச்சை அரங்கம் கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, கன்டோன்மென்ட் நிர்வாகம் சார்பில், அதற்கான கட்டடம் கட்டப்பட்டது.பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர்., நிதி, 41.50 லட்சம் ரூபாய் செலவில், உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து, அறுவை சிகிச்சை அரங்கம், நேற்று திறந்து வைக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில், பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் துணை பொது மேலாளர் சந்திரசேகரன், பல்லாவரம் - பரங்கிமலை கன்டோன்மென்ட் தலைமை நிர்வாக அதிகாரி தினேஷ்குமார் ரெட்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.