மழைக்கு ஒதுங்கியவர்கள் மீது அரசு பஸ் மோதி மூவர் காயம்
தாம்பரம்:புறநகர் பகுதிகளில், நேற்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்தது. மதியம் மழை பெய்த போது, பெருங்களத்துாரில் இருந்து தாம்பரம் நோக்கி இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள், இரும்புலியூரில் புறவழிச்சாலை மேம்பாலத்தின் கீழ் ஒதுங்கி நின்றனர்.மழை விட்டதும் அவர்கள் புறப்பட தயாராகினர். அப்போது, காஞ்சிபுரத்தில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த தடம் எண்: 79 என்ற அரசு பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து, அவர்கள் மீது மோதியது.இதில், மூவர் விபத்தில் சிக்கினர். இருவருக்கு பலத்த காயமும், ஒருவருக்கு லேசான காயமும் ஏற்பட்டது.அப்போது, பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் அங்கிருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது. போலீசார் விரைந்து, காயமடைந்தவர்களை மீட்டு, தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.இதற்கிடையில், செங்கல்பட்டு சென்ற முதல்வர் ஸ்டாலின், சென்னைக்கு திரும்பும் நேரம் நெருங்கியதால், போக்குவரத்து போலீசார், விபத்தை ஏற்படுத்திய பேருந்தையும், விபத்தில் சிக்கிய வாகனங்களையும் அப்புறப்படுத்தினர்.இச்சம்பவம் குறித்து, குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.