| ADDED : ஜூலை 12, 2024 09:10 PM
அச்சிறுபாக்கம்:அச்சிறுப்பாக்கம் அடுத்த தண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தேவராஜ், 56, பெருமாள், 47, ஆகிய இருவரும், நேற்று பெருக்கரணை கிராமத்தில் இருந்து, தண்டலம் நோக்கி 'ஹீரோ ஹோண்டா' இருசக்கர வாகனத்தில் சென்றனர்.அப்போது, கயப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த குருநாதன், 17, என்பவர், அச்சிறுபாக்கத்தில் இருந்து கயப்பாக்கம் நோக்கி, 'ஹோண்டா ஸ்கூட்டி' வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் போது, மேட்டுப்பருக்கல் அருகே இரு வாகனங்களும் நேருக்குநேர் மோதியது.இதில், தேவராஜ், பெருமாள், குரு ஆகிய மூவரும் காயமடைந்தனர். தகவல் அறிந்து வந்த அச்சிறுபாக்கம் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதில், தேவராஜ் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து அச்சிறுபாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.