பொக்லைனில் மோதிய மாநகர பஸ் 15 பயணியர் காயத்துடன் தப்பினர்
கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே, இரவு நேரத்தில் மாநகர பேருந்து, 'பொக்லைன்' இயந்திரம் மீது மோதி, கால்வாயில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், 15 பயணியர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். கூடுவாஞ்சேரி அடுத்த மாம்பாக்கம், சோனலுார் கிராமத்திலிருந்து தாம்பரம் நோக்கி, தடம் எண் '55சி' என்ற மாநகர பேருந்து, மூன்று பெண்கள் உட்பட 15 பயணியருடன், நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் புறப்பட்டது. வண்டலுார் அடுத்த கொளப்பாக்கம் பெட்ரோல் பங்க் அருகே வந்த போது, முன்னால் சென்ற 'பொக்லைன்' இயந்திரம் மீது, மாநகர பேருந்து மோதி, சாலையோரம் உள்ள கால்வாயில் கவிழ்ந்தது. இதில், 15 பயணியரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். பயணியரின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அனைவரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலமாக அருகிலுள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, 'கிரேன்' உதவியுடன் மாநகர பேருந்தை மீட்டனர். சம்பவம் குறித்து, தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.