சாலை நடுவே பள்ளத்தில் கவிழ்ந்த சரக்கு வாகனம்
மறைமலை நகர்:திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இருந்து சேலத்திற்கு, 25 டன் இரும்பு கம்பிகள் ஏற்றிக்கொண்டு, சரக்கு வாகனம் ஒன்று நேற்று சென்றது.சரக்கு வாகனத்தை, ஆரணி பகுதியைச் சேர்ந்த சண்முகம்,30, என்பவர் ஓட்டினார். செங்கல்பட்டு அடுத்த இருங்குன்றம் பள்ளி அருகில், திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, முன்னால் சென்ற பேருந்து ஓட்டுனர் திடீர் 'பிரேக்' பிடித்துள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம், இரு சாலைக்கும் நடுவே இருந்த பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது.நல்வாய்ப்பாக, சரக்கு வாகன ஓட்டுனர் காயம் ஏதுமின்றி உயிர் தப்பினார்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், 'கிரேன்' வாயிலாக லாரியை மீட்டனர்.இதன் காரணமாக, தேசிய நெடுஞ்சாலையில் சென்னை மார்க்கத்தில், 3 கி.மீ., துாரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில், போலீசார் ஈடுபட்டனர்.