உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2 ஆண்டாக நடத்தப்படாத பேரவை கூட்டம்

மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2 ஆண்டாக நடத்தப்படாத பேரவை கூட்டம்

உத்திரமேரூர்:இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாத மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை பேரவை கூட்டத்தை, இந்தாண்டு நடத்த வேண்டுமென, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். படாளத்தில், மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலைக்கு செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில், 5,000 ஏக்கர் பரப்பளவு கரும்பு சாகுபடி உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் 2 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்படுகிறது. இந்த சர்க்கரை ஆலையில் ஆண்டுதோறும் பொதுப் பேரவை கூட்டம், ஆலை நிர்வாகத்தால் நடத்தப்பட்டு வருகிறது. அதில், ஆலையின் எதிர்கால வளர்ச்சி திட்டம், விவசாயிகளுக்கு நலத் திட்டங்கள் வழங்குவது, அதிக கரும்பு உற்பத்திக்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிப்பது வழக்கம். இங்கு, 2022ல் கடைசியாக பொதுப் பேரவை கூட்டம் நடந்தது. கடந்த, 2023, 2024 ஆண்டுகளில் பொதுப் பேரவை கூட்டம் நடத்தப்படவில்லை. இதனால், இரண்டு ஆண்டுகளாக விவசாயிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்படாமல் உள்ளன. கரும்பு உற்பத்தியை அதிகரிக்க மானியம் மற்றும் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோருவது உள்ளிட்ட கோரிக்கைகளை ஆலை நிர்வாகத்திற்கு, விவசாயிகள் தெரிவிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை பொதுப் பேரவை கூட்டம் நடத்த, ஆலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மதுராந்தகம் சர்க்கரை ஆலையின் செயலாட்சியர் குமரேஸ்வரி கூறியதாவது: இரண்டு ஆண்டுகளாக கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பொதுப் பேரவை கூட்டம் நடத்தப்படாமல் உள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் பொதுப் பேரவை கூட்டம் நடத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி