உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மதுராந்தகத்தில் டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்த ஆம்புலன்ஸ்

மதுராந்தகத்தில் டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்த ஆம்புலன்ஸ்

மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே, ஆம்புலன்ஸ் வாகனம் கவிழ்ந்த விபத்தில், நோயாளி உட்பட அதில் பயணித்த ஐந்து பெண்கள், சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.திருப்பூர் மாவட்டம், பல்லடம் சாலை, சின்னக்கரை பகுதியைச் சேர்ந்தவர் பவுஜியா, 50.இவர், கடந்த சில ஆண்டுகளாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.கடந்த மாதம் சென்னை, அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வந்து, சிகிச்சை பெற்று திருப்பூர் சென்றுள்ளார்.நேற்று, மீண்டும் உடல்நிலை மோசமானதால், தனியார் ஆம்புலன்ஸ் வாயிலாக, பவுஜியா மற்றும் அவரது உறவினர்களான பைரோஜோ,44, ரொக்கையம்மாள், 55, ஆசியாமா,85, மற்றும் ஜாஸ்மின், 31, ஆகியோர், சென்னை நோக்கிச் சென்றுள்ளனர்.அப்போது, மதுராந்தகம் அருகே அய்யனார் கோவில் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்ற போது, திடீரென டயர் வெடித்துள்ளது.இதில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ், ஒரு பக்கமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மதுராந்தகம் போலீசார், விபத்தில் சிறிய காயங்களுடன் இருந்த பவுஜியா உட்பட ஐந்து பெண்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஓட்டுனர், சிறு காயமின்றி உயிர் தப்பினார்.இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, மதுராந்தகம் போலீசார் விசாரிக்கின்றனர்.இந்த விபத்தால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி