தறிகெட்டு ஓடிய காரால் விபத்து காயத்துடன் தப்பிய வியாபாரி
மறைமலைநகர்:ஆப்பூர் அருகே தண்ணீர் கேன் வியாபாரி சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர தடுப்பு, மின்கம்பங்களில் மோதி விபத்தில் சிக்கியது.சிங்கபெருமாள் கோவிலை அடுத்த சேந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் வினோத், 36. அதே பகுதியில், வீடுகளுக்கு தண்ணீர் கேன் வியாபாரம் செய்து வருகின்றார்.நேற்று காலை, சிங்கபெருமாள் கோவிலில் இருந்து, சேந்தமங்கலம் நோக்கி, தன் மாருதி காரில் வினோத் சென்று கொண்டிருந்தார். சிங்கபெருமாள் கோவில்,- ஸ்ரீ பெரும்புதுார் சாலையில், ஆப்பூர் பெட்ரோல் பங்க் அருகில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை ஓர தடுப்பு மற்றும் மின் கம்பத்தில் மோதி, அருகில் மரம், செடிகள் நிறைந்த பகுதிக்குள் புகுந்தது.வலது கையில் காயமடைந்த வினோத்தை, அங்கிருந்தோர் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. விபத்து குறித்து, பாலுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.