கடலோர பாதுகாப்பு பணிக்கு மீனவ இளைஞர்களுக்கு அழைப்பு
தாம்பரம்:தாம்பரம் காவல் ஆணையரகத்தில், கடலோர காவல் பாதுகாப்பு ஊர்காவல் படை பணியில் சேர, நீச்சல் திறன் கொண்ட மீனவ இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இப்பணியில் சேர விரும்பும் மீனவ இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியில் சேர விரும்புவோர், குற்றப்பின்னணி இல்லாதவராக இருத்தல் வேண்டும்.தாம்பரம் காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும். மீனவர் என்பதற்கான அடையாள அட்டையை, சம்பந்தப்பட்ட மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளிடம் பெற்றிருக்க வேண்டும். 2025 ஜூலை 1 அன்று, 18 வயதிற்கு மேல் உள்ளவர்களாகவும், 50 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். கடல் நீச்சல் தெரிந்தவராக இருக்க வேண்டும். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தவறியவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் ஊர்காவல் படையினருக்கு, 45 நாட்கள், தினசரி ஒரு மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடித்த பின், கடலோர காவல் பாதுகாப்பு படையுடன் இணைந்து பணிபுரிய, கானத்துார் கடற்கரை காவல் நிலையத்திற்கு அனுப்பப்படுவர். இரவு நேர ரோந்து பணி மற்றும் பகல் நேர ரோந்து பணிக்கு, 560 ரூபாய் சிறப்பு படியாக வழங்கப்படும். மேற்கண்ட தகுதியுடையோர், தாம்பரம் மாநகர காவல் ஆயுதப்படை, ஊர்காவல் படை அலுவலகம், பதுவஞ்சேரி, சென்னை - 126 என்ற முகவரியில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, செப்., 26ம் தேதி மாலை 5:00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம்.