உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் பிரசாரம்...ஓய்ந்தது!:வெளிநபர்களை வெளியேற்ற நடவடிக்கை

ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் பிரசாரம்...ஓய்ந்தது!:வெளிநபர்களை வெளியேற்ற நடவடிக்கை

செங்கல்பட்டு:ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில், தி.மு.க., - அ.தி.மு.க., - த.மா.கா., உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர்களின் அனல் பறக்கும் பிரசாரம் நேற்றுடன் நிறைவடைந்தது. தொகுதிக்குள் தங்கியுள்ள வெளியூர் நபர்களை வெளியேற்றும் பணியில், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில், மதுரவாயல், அம்பத்துார், ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார், பல்லாவரம், தாம்பரம் ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன.இந்த ஆறு சட்டசபை தொகுதிகளில், ஆண் வாக்காளர்கள் 11 லட்சத்து 80,263 பேர், பெண் வாக்காளர்கள் 12 லட்சத்து 1,427 பேர், இதர வாக்காளர்கள் 429 பேர் என, மொத்தம் 23 லட்சத்து 82,119 வாக்காளர்கள் உள்ளனர்.இத்தொகுதியில், 2,437 ஓட்டுச்சாவடிகளில், 337 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை என, கண்டறியப்பட்டு உள்ளன. இந்த ஓட்டுச்சாவடிகளில், துணை ராணுவம் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் டி.ஆர்.பாலு, அ.தி.மு.க., வேட்பாளர் பிரேம்குமார், த.மா.கா., வேட்பாளர் வேணுகோபால், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பிரபாகரன் மற்றும் பதிவு பெற்ற 11 அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் 17 பேர் என, 31 போட்டியிடுகின்றனர். தி.மு.க., வேட்பாளர் டி.ஆர்.பாலு, கடந்த30ம் தேதி, திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவிலில் இருந்து பிரசாரத்தை துவக்கி, தாம்பரம் பகுதியில், நேற்று நிறைவு செய்தார்.இவருக்கு ஆதரவாக, தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ ஆகியோர் பிரசாரம் செய்தனர்.அ.தி.மு.க., வேட்பாளர் பிரேம்குமார், 30ம் தேதி பிரசாரத்தை துவக்கி, தாம்பரத்தில் நிறைவு செய்தார். இவருக்கு ஆதரவாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, நடிகை விந்தியா ஆகியோர் பிரசாரம் செய்தனர்.இதேபோல், த.மா.கா., வேட்பாளர் வேணுகோபால், மங்காடு காமாட்சியம்மன் கோவிலில் இருந்து, த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் பிரசாரத்தை துவக்கி, ஸ்ரீபெரும்புதுாரில் நேற்று நிறைவு செய்தார்.இவருக்கு ஆதரவாக, பா.ஜ., மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்ட தலைவர்கள் பிரசாரம் செய்தனர். இந்த வேட்பாளர்கள் அனைவரும், நேற்று மாலை 6:00 மணி வரை, அனல் பறக்கும் பிராசரத்துடன் நிறைவு செய்தனர். சுயேச்சை வேட்பாளர்கள் பெயர் அளவிற்கு மட்டுமே பிரசாரம் செய்தனர்.இதுமட்டும் இன்றி, சுவர் விளம்பரம் அதிமாக இடம்பெறவில்லை. வேட்பாளர்களுக்கு ஆதரவாக போஸ்டர்கள் மட்டும் ஒட்டப்பட்டிருந்தன.முக்கிய கட்சி வேட்பாளர்களுக்காக, சமூக வலைதளங்களில் அவர்களது கட்சியினர் பிரசாரம் செய்து வருகின்றனர். அது தேர்தல் விதிமீறல் ஆதலால், அதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.கலெக்டரின் உத்தரவைத் தொடர்ந்து, வெளியூரைச் சேர்ந்த கட்சியினர், தொகுதியில் ஓட்டு இல்லாத நபர்கள் தொகுதியிலிருந்து வெளியேற அறிவுறுத்தியிருந்தார். விடுதி, திருமண மண்டபம் போன்ற இடங்களில், போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.சூறாவளி பிரசாரம் நேற்று முடிந்த நிலையில், தேர்தலுக்கான பணிகளை மேற்கொண்டு வரும் மாவட்ட நிர்வாகம், ஓட்டுச்சாவடிகளுக்கு தேவையான பொருட்களை இன்று மாலை அனுப்பி வைக்க உள்ளது.சட்டசபை தொகுதிகளில் உள்ள கிடங்கில் உள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்ல, சரக்கு வாகனங்கள் தயாராக உள்ளன.

அலுவலர்கள் மீது நடவடிக்கை

செங்கல்பட்டு மாவட்டத்தில், தேர்தல் பயிற்சியில் பங்கேற்காதவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இதுகுறித்து, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அருண்ராஜ் அறிக்கை: செங்கல்பட்டு மாவட்டத்தில், சோழிங்கநல்லுார், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர் -- தனி, மதுராந்தகம் - தனி ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன.இந்த தொகுதிகளில், லோக்சபா தேர்தலில் பணிபுரியும் அலுவலர்களுக்காக, மார்ச் 24ம் தேதி மற்றும் கடந்த 7, 13 ஆகிய தேதிகளில், தேர்தல் பயிற்சி வகுப்புகள் மற்றும் மறுபயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்த பயிற்சி வகுப்புகளில் பங்கேற்காத அலுவலர்கள் மீதும், தேர்தல் பணிகளை புறக்கணித்தவர்கள் மீதும், சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

'சிசிடிவி' கேமராக்கள் அமைப்பு

லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு, நாளை மறுநாள் நடக்கிறது. இதையடுத்து, தேர்தல் ஆணையம், அரசு உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய துவக்க, நடுநிலைப் பள்ளிகள் ஆகியவற்றில் ஓட்டுச்சாவடிகள் ஏற்படுத்தி உள்ளன.குடிநீர், கழிப்பறை, மின்விசிறி, மின் இணைப்பு, மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்கு சாய்வுதளம் உள்ளிட்ட வசதிகள் உள்ளனவா என, வருவாய், உள்ளாட்சி நிர்வாகத்தினர் ஆய்வு செய்தனர்.மாமல்லபுரம், கொக்கிலமேடு நடுநிலைப்பள்ளிகளில் சாய்வு தளம் ஏற்படுத்தப் பட்டது. மின்தடம் பரிசோதித்து சரிசெய்யப்பட்டது.பதற்றமான ஓட்டுச்சாவடிகளாக அறியப்பட்ட புதுப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி, குன்னத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில், 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதாக, தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ