சட்டமங்கலம் சாலை படுமோசம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
மறைமலைநகர்: மறைமலை நகர் -- ஆப்பூர் சாலை, சட்டமங்கலம் கிராம பகுதியில் கடுமையாக சேதமடைந்துள்ளதால், சாலையை சீரமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மறைமலை நகர் -- ஆப்பூர் சாலை, 7 கி.மீ., உடையது. சட்டமங்கலம், பனங்கொட்டூர், திருக்கச்சூர் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இந்த சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர். சிங்கபெருமாள் கோவில்- - ஸ்ரீ பெரும்புதுார் சாலையின் இணைப்புச் சாலையான இச்சாலையில், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மறைமலை நகர், காட்டாங்கொளத்துார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, ஒரகடம் பகுதிக்கு இருசக்கர வாகனங்களில் வேலைக்குச் செல்வோர், இந்த சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சட்டமங்கலம் கிராம பகுதியில், இந்த சாலை கடுமையாக சேதமடைந்துள்ளது. ஜல்லிகள் பெயர்ந்து அபாயகரமான நிலையில் உள்ளதால், வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து காயமடைந்து வருகின்றனர். அடிக்கடி, இருசக்கர வாகனங்கள் பஞ்சராவதால், குறிப்பிட்ட நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். எனவே, இந்த சாலையை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.