செங்கை மாவட்ட மருத்துவமனையை திறந்து 20,026 பேருக்கு பட்டா வழங்கினார் முதல்வர்
பல்லாவரம்:தாம்பரம் சானடோரியத்தில் 110 கோடி ரூபாயில் செலவில் கட்டப்பட்ட செங்கல்பட்டு மாவட்ட மருத்துவமனை, 7.10 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பல் மருத்துவமனை, 1 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த ஆய்வகம் ஆகியவற்றை, முதல்வர் ஸ்டாலின், நேற்று திறந்து வைத்தார். முதல்வர் ஸ்டாலினுக்கு, பல்லாவரத்தில் இருந்து வழிநெடுங்கிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். செங்கல்பட்டு மாவட்ட மருத்துவமனையை, திறந்து வைத்த முதல்வர், அக்கட்டடத்தை சுற்றிப் பார்த்தார். பின், பல்லாவரத்தில் நடந்த நிகழ்ச்சியில், 20,026 பேருக்கு பட்டா வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ராமச்சந்திரன், வேலு, அன்பரசன், எம்.எல்.ஏ.,க்கள் கருணாநிதி, ராஜா, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு பட்டா வழங்கி, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மக்களின் உடல் நலனுக்கு உறுதுணையாக இருக்கப்போகிற, செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை திறந்துள்ளேன். தவிர, 20,026 பேருக்கு பட்டா வழங்கும் இந்த நிகழ்ச்சியை, சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர். தாம்பரம் மருத்துவமனை, சுற்றியுள்ள மக்களின் வசதிக்காக, 110 கோடி ரூபாய் செலவில், மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 7.24 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பல் மருத்துவமனை, 1 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த ஆய்வகம், தாம்பரத்தில், 90 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட, மூன்று நகர்புற துணை சுகாதார நிலையங்களையும் திறந்து வைத்துள்ளேன். இவை, சென்னை புறநகரில் வசிக்கும் மக்களுக்கு பயனளிக்கும். பொதுவாக, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றால், இன்றைக்கு எத்தனை பேருக்கு பட்டா வழங்க போகிறோம் என்று தான், முதலில் கேட்பேன். ஏனென்றால், மனிதனின் அடிப்படை தேவை என்பது, உணவு, உடை, இருப்பிடம். உணவு, உடை எளிதாக கிடைத்து விடும். ஆனால், இருக்கும் இடம் எளிதாக கிடைக்காது. நிலம் தான் அதிகாரம். காலுக்கு கீழ் சிறிது நிலமும், தலைக்கு மேல் ஒரு கூரையும், இன்னும் பலருக்கு கனவு தான். அதனால் தான், பட்டா வழங்குவதில் எப்போதும் தனி கவனம் செலுத்துகிறேன். செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும், 41,858 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் பேசினார். திருநங்கைகள் மறியல் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த விழாவில் பெருங்களத்துார் பகுதியை சேர்ந்த 32 திருநங்கைகளுக்கு காட்டாங்கொளத்துார் ஒன்றியம் ஒழலுார் கிராமத்தில் வீட்டுமனை ஒதுக்கீடு செய்யப்பட்டு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இதில் சிலருக்கு பச்சை நிற பேப்பரிலும், சிலருக்கு வெள்ளை பேப்பரிலும் பட்டா வழங்கப்பட்டதோடு பெயர், தந்தை பெயர் எழுத்து பிழையுடன் இருந்தது. இது குறித்து விவரம் கேட்க 20க்கும் மேற்பட்ட திருநங்கைகள் நேற்று மாலை செங்கல்பட்டில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் சென்றனர். அதிகாரிகள் முதல்வர் நிகழ்ச்சிக்கு சென்று இருந்தால் உரிய பதில் கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த திருநங்கைகள் செங்கல்பட்டு - மதுராந்தகம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகலறிந்து வந்த செங்கல்பட்டு நகர போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்தனர். பட்டாவில் உள்ள பிழையை திருத்த வேண்டும், எங்களுக்கு ஒதுக்கீடு செய்த இடத்தை எங்களுக்கு அளவீடு செய்து வழங்க வேண்டும் என, திருநங்கைகள் கூறினர். வரும் 13ம் தேதி இடம் அளவீடு செய்து தரப்படும் என, வருவாய் துறை அதிகாரிகள் கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.