உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பிரதான சாலைகளில் மாடுகள் உலா மாமல்லபுரத்தில் தீராத பிரச்னை

பிரதான சாலைகளில் மாடுகள் உலா மாமல்லபுரத்தில் தீராத பிரச்னை

மாமல்லபுரம்:மாமல்லபுரம் சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிவதால், வாகன ஓட்டிகள் பீதியில் பயணிக்கின்றனர்.மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் விவசாயிகள், பால் கறவை மாடுகள், இறைச்சி தேவைக்கு ஆடுகள் ஆகியவற்றை வளர்க்கின்றனர். விவசாயிகள் முன்பு, அவற்றை வயல்வெளியில் மேய்த்து, தொழுவத்தில் அடைப்பர்.தற்போது மேய்ப்பது, அடைப்பது இல்லை. பெரும்பாலானோர், மாடுகளை அவற்றின் போக்கில் மேய விடுகின்றனர்.மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகள், பிரதான சாலைகளில், அவை எந்நேரமும் உலவுகின்றன. சாலையில் ஏராளமாக திரண்டு உலவியும், குறுக்காக கடந்தும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துகின்றன.சில நேரத்தில், மாடுகள் மீது வாகனம் மோதி, விபத்தும் ஏற்படுகிறது. இருசக்கர வாகன ஓட்டிகள், அடிக்கடி விபத்துக்குள்ளாகி இறக்கின்றனர்.சுற்றுலா பயணியருக்கும், மாடுகள் அச்சுறுத்தலாக உள்ளன. சாணம், சிறுநீர் கழித்து, சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.இங்குள்ள காவல் நிலையம், திருக்கழுக்குன்றம் சாலை, ஐந்து ரதங்கள் சாலை, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்களில், மாடுகள் சாலையில் கும்பலாக படையெடுக்கும் நிலையில், கடும் பாதிப்பு ஏற்படுகிறது.மாடுகள் சாலையில் உலவினால் உள்ளாட்சி, கால்நடை ஆகிய துறையினர் அவற்றை பிடித்து, உரிமையாளரிடம் அபராதம் வசூலிக்குமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டும், உரிய நடவடிக்கை இல்லை.விடுமுறை நாட்களில், சுற்றுலா வாகனங்கள் குவியும் போது படையெடுக்கும் மாடுகளால், வாகனங்கள் செல்ல இயலாமல் நெரிசல் ஏற்படுகிறது.எனவே, சாலைகளில் மாடுகள் உலவாமல் தடுக்க, அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !