சேதமான அஞ்சூர் சாலை பகுதிவாசிகள் தடுமாற்றம்
மறைமலைநகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், அஞ்சூர் ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள அஞ்சூர் - - தென்மேல்பாக்கம் சாலை, 4 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலையை பயன்படுத்தி அனுமந்தபுரம், கொண்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள், அஞ்சூர் வழியாக மகேந்திரா சிட்டியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தினமும் வேலைக்குச் சென்று வருகின்றனர்.இந்த சாலையில் தென்மேல்பாக்கம் -- பழைய அஞ்சூர் அருகில், 300 மீட்டர் சாலை கடுமையாக சேதமடைந்து உள்ளது.இதனால் ஜல்லி கற்கள் குத்தி, வாகனங்கள் பஞ்சராகி, குறித்த நேரத்தில் வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.எனவே, இந்த சாலையை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.