மூடுகால்வாய் சிமென்ட் பெயர்ப்பு மரண ஓட்டைகளால் விபத்து அபாயம்
கூடுவாஞ்சேரி:நந்திவரம் --- கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் உள்ளே அமைக்கப்பட்டுள்ள மூடுகால்வாய், பல இடங்களில் மரண ஓட்டையுடன் உள்ளது. விபத்து நிகழும் முன், உரிய நடவடிக்கை தேவை என, பயணியர் கோரிக்கை எழுப்பி உள்ளனர்.நந்திவரம் - கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்திலிருந்து, தினமும் 10000க்கு மேற்பட்ட பயணியர், சென்னை நகரின் பல பகுதிகளுக்கும், சென்று வருகின்றனர்.இந்த பேருந்து நிலையத்தின் சுற்று சுவர் ஓரமாக 300 அடி, நீளம், 3 அடி அகலம், 10 அடி ஆழத்தில் மூடுகால்வாய் உள்ளது. இந்த கால்வாய் நடைமேடையாகவும் பயன்படுகிறது.இந்த மூடுகால்வாய் மேலே உள்ள சிமென்ட் சட்டங்கள், பல இடங்களில் பெயர்த்து எடுக்கப்பட்டுள்ளன. இதனால், நடை மேடையின் பல இடங்களில் ஓட்டைகள் உள்ளன.பேருந்து நிலையத்திற்கு வரும் பயணியர் கவனக் குறைவாக இந்த ஓட்டைக்குள் விழுந்தால், படுகாயம் அடையவும், உயிர்பலி ஏற்படவும் வாய்ப்புள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி, கால்வாய் மீது மீண்டும் சிமென்ட் சட்டங்களை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.