உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மறைமலை நகரில் சாலையோரத்தில் நிறுத்தப்படும் வாகனங்களால் இடையூறு

மறைமலை நகரில் சாலையோரத்தில் நிறுத்தப்படும் வாகனங்களால் இடையூறு

மறைமலை நகர்:மறைமலை நகர் நகராட்சி 21 வார்டுகள் உடையது. மறைமலை நகர் நகர்புற பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள், நுாற்றுக்கணக்கான வணிக கடைகள், தொழிற்சாலைகள், வங்கிகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன.மறைமலை நகர் பஜார் வீதிகளில் நகராட்சி சார்பில் சிமென்ட் கற்களால் நடைபாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மறைமலை நகர் எம்.ஜி. ஆர்., சாலை வாகன போக்குவரத்து நிறைந்த சாலை சுற்றியுள்ள 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளுக்கு தினமும் இங்கு வந்து செல்கின்றனர்.இந்த சாலையில் இருபுறமும் இரு சக்கரங்களை நிறுத்தி செல்லும் வாகன ஓட்டிகளால் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: மறைமலை நகரை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து செங்கல்பட்டு, தாம்பரம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைக்கு செல்வோர் காலையில் இருசக்கர வாகனங்களை கொண்டு வந்து சாலை ஓரங்களில் நிறுத்தி விட்டு பேருந்து, மின்சார ரயில்கள் வாயிலாக வேலைக்கு சென்று வருகின்றனர். இரவு மீண்டும் வந்து வாகனங்களை எடுத்து செல்கின்றனர். இதன் காரணமாக, மற்ற வாகன ஓட்டிகள் 'பீக் ஹவர்'களில் வெகுவாக பாதிக்கப்பட்டு வாக்குவாதங்கள் எழுகின்றன.மேலும் இருசக்கரவாகனங்கள் திருடுபோவது தொடர்கதையாக உள்ளது. எனவே சாலை ஓரம் வாகனங்கள் நிறுத்துவதை தடுத்து நிறுத்தி போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்த போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !