உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணி கிடப்பில் போட்டதால் அதிருப்தி

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணி கிடப்பில் போட்டதால் அதிருப்தி

செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகராட்சியில், ஜே.சி.கே.நகர் பகுதியில், 5,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இங்குள்ள வீடுகளுக்கு குழாய் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்ய, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.அதன் பின், 2023 - 24ம் நிதியாண்டில், ஜே.சி.கே.நகர் பகுதியில், 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்ட, 1.48 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்தது.இப்பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு, 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி முடிந்துள்ளது. ஆனால், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி துவங்கிய நிலையிலேயே, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது.இதுகுறித்து, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ஆகியோரிடம், சமூக ஆர்வலர்கள் மனு அளித்தனர்.இந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்க, நகராட்சி ஆணையர், பொறியாளர் ஆகியோருக்கு அமைச்சர் உத்தவிட்டார்.ஆனால், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணி துவக்கப்படாமல், கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, நகரவாசிகள் நலன் கருதி, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணியை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி