உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கல்குவாரி பள்ளங்களில் வீணாகும் தண்ணீர் மாற்று வழிகளில் பயன்படுத்த வலியுறுத்தல்

கல்குவாரி பள்ளங்களில் வீணாகும் தண்ணீர் மாற்று வழிகளில் பயன்படுத்த வலியுறுத்தல்

மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில், தனியாருக்கு சொந்தமான கைவிடப்பட்ட மற்றும் காலாவதியான கல் குவாரி பள்ளங்கள் உள்ளன.இதில், செட்டிப்புண்ணியம், வடகால், கீரப்பாக்கம், சட்டமங்கலம், கொளத்துார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், அதிக அளவில் கல் குவாரி பள்ளங்கள் உள்ளன. இவை, நுாற்றுக்கணக்கான அடி ஆழம் கொண்டவை.இவ்வாறு கைவிடப்பட்ட கல் குவாரிகளில், ஊற்று தண்ணீர் மற்றும் மழை நீர் சூழ்ந்து தண்ணீர் நிரம்பியுள்ளது. மழைக்காலத்தில், குவாரி பள்ளம் முழுமையாக நிரம்பி, ஆண்டு முழுதும் இந்த பள்ளம் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது.அந்த தண்ணீர் வடியாமல் வீணாக தேங்குகிறது. இவ்வாறு கைவிடப்பட்ட கல் குவாரி பள்ளங்களில் தேங்கும் தண்ணீரை, பயனுள்ளதாக்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:செங்கல்பட்டு மாவட்டத்தில், தனியார் நிலங்கள் மட்டுமின்றி, மலை பகுதிகளிலும், அரசுக்கு சொந்தமான இடங்களிலும், கடந்த காலங்களில் கல் குவாரிகள் இயங்கின.கல் குவாரிக்கு அனுமதிக்கப்பட்ட காலம் முடிவடைந்த குவாரிகள், தற்போது மிகப்பெரிய பள்ளங்களாக மாறியுள்ளன. வெளியூர்களை சேர்ந்த இளைஞர்கள் குளிக்க வரும் போது, அடிக்கடி உயிரிழப்புகளும் நிகழ்கின்றன.வீணாக தேங்கும் தண்ணீரை சுத்திகரித்து, குடிநீராக்கி, குடிநீர் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளுக்கு வழங்கிட, அரசு நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளலாம்.கைவிடப்படும் கல் குவாரி பகுதிகளுக்கு அருகில், பெரும்பாலான இடங்களில் அரசு புறம்போக்கு நிலங்கள், வனப்பகுதி உள்ளிட்டவை உள்ளன. இந்த பள்ளங்களில் உள்ள தண்ணீரை பயன்படுத்தி, அப்பகுதிகளில் மரங்கள் வளர்க்கலாம்.இதன் வாயிலாக, ஆண்டு முழுதும் வீணாக தேங்கியுள்ள தண்ணீரை, பயனுள்ள வகையில் உபயோகிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ