ஒத்திவாக்கம் மேம்பால பணியை விரைந்து முடிக்க... எதிர்பார்ப்பு : தாமதமாவதால் சுற்றுப்பகுதி கிராமத்தினர் அதிருப்தி
செங்கல்பட்டு:ஒத்திவாக்கம் - பொன்விளைந்தகளத்துார் இடையே போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, ரயில்வே கடவுப்பாதையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், விரைவில் மேம்பால பணிகளை முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டுமென, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.செங்கல்பட்டு அடுத்த, ஒத்திவாக்கம் - பொன்விளைந்தகளத்துார் இடையே, ரயில்வே கடவுப்பாதை உள்ளது.இப்பகுதியைச் சுற்றி பொன்விளைந்தகளத்துார், புன்னப்பட்டு, ஒத்திவாக்கம், ஆனுார், வல்லிபுரம், பூதுார் என, 25க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.இவர்கள் பள்ளி, கல்லுாரி, அரசு மருத்துவமனை, அத்தியாவசிய தேவை, அரசு அலுவலகங்கள் மற்றும் வெளியிடங்களுக்கு, அரசு பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் வாயிலாக செல்கின்றனர்.குறிப்பா, இருசக்கர வாகனங்களில் அதிகமானோர் சென்று வருகின்றனர். அப்போது, ஒத்திவாக்கம் ரயில்வே கடவுப்பாதையை கடந்து தான் செல்ல வேண்டும். ரயில் போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில், அடிக்கடி ரயில்வே கடவுப்பாதை மூடப்படுகிறது. இதனால், சாலையில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மேம்பாலம் அமைக்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகளிடம், கிராமவாசிகள் மற்றும் அரசியல் கட்சியினர் கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து, ரயில்வே கடவுப்பாதை வழியாக கடந்து செல்லும் வாகனங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தியதில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்வதை உறுதிப்படுத்தினர்.இதனால், ஒத்திவாக்கம் பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டலாம் என, உயரதிகாரிகளுக்கு ரயில்வே துறையினர் பரிந்துரை செய்தனர்.இதைத்தொடர்ந்து, செங்கல்பட்டு - ஒத்திவாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே 2011 - 12ம் ஆண்டு, 30.40 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.தொடர்ந்து ரயில்வே துறை, கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன், தண்டவாளப் பகுதியில், மேம்பாலப் பணிகளை முடித்தது.பின், 2018ம் ஆண்டு, 33.24 கோடி ரூபாய் ஒதுக்கி, அரசு தொழில்நுட்ப அனுமதி வழங்கியது.மற்ற பணிகளை மேற்கொள்ள, 2022 மார்ச் 24ம் தேதி, ஒப்பந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.இதே ஆண்டு ஆகஸ்டில் மேம்பாலப் பணிக்கு, 26.58 கோடி ரூபாய்க்கு 'டெண்டர்' விடப்பட்டது. இப்பணிகளை மேற்கொள்ள, ஈரோடு மயான்ஸ் இன்பிராஸ்டரக்சர் என்ற நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.கடந்த 2023 மார்ச் 12ம் தேதி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், மேம்பாலப் பணிகளை துவக்கி வைத்தார்.தற்போது, ரயில்வே கடவுப்பாதையில் இருந்து, திருக்கழுக்குன்றம் சாலையில் மேம்பாலம் கட்டும் பணிகள் நிறைவுபெறும் நிலையில் உள்ளன.கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில், ஒத்திவாக்கம் பகுதியில் பணிகள் துவங்கி, நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், ரயில்வே கடவுப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்துடன், பாலத்தை இணைக்கும் பணிகளுக்கு, ரயில்வே நிர்வாகம் சார்பில், நெடுஞ்சாலைத் துறை கட்டுமான பிரிவுக்கு அனுமதி வழங்கப்பட்டது.இந்த பணிகளுக்காக ஒத்திவாக்கம் ரயில்வே கடவுப்பாதையை மூட, செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து, அந்த கடவுப்பாதை அடைக்கப்பட்டுள்ளது. தற்போது, ஒத்திவாக்கம் பகுதியில் மேம்பாலப் பணிகளும், கடவுப்பாதையில் சில பணிகளும் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், இப்பணிகள் அனைத்தையும் விரைவாக முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டுமென, சுற்றுப்பகுதி கிராமத்தினர் எதிர்பார்க்கின்றனர்.ஒத்திவாக்கம் பகுதியில், மேம்பாலம் அமைக்கும் பணிகளும், ரயில்வே கடவுப்பாதை மேம்பாலத்துடன், பாலங்களை இணைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஜூன் மாதத்திற்குள் அனைத்து பணிகளும் முடிந்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ரயில்வே மேம்பாலம் திறக்கப்படும்.- கட்டுமான பிரிவு அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை, செங்கல்பட்டு.
கும்மிருட்டால் அவதி
செங்கல்பட்டு பகுதியிலுள்ள பொன்விளைந்தகளத்துார், புன்னப்பட்டு, ஒத்திவாக்கம், ஆனுார், வல்லிபுரம், பூதுார் என, 25க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள், செங்கல்பட்டு நகருக்கு பல்வேறு பணிகளுக்காக வருகின்றனர். இவர்கள் பணிகளை முடித்து மீண்டும் இரவு நேரத்தில் வீடு திரும்பும் போது, ஒத்திவாக்கம் ரயில்வே கடவுப்பாதை அடைக்கப்பட்டுள்ளதால், அருகே ரயில் தண்டவாளத்தை ஒட்டி உள்ள சிறிய சாலையில் செல்கின்றனர். இந்த சாலை மின்விளக்கு வசதியின்றி கும்மிருட்டாக உள்ளதுடன், சாலையில் சில இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், இரவில் செல்வோர் அடிக்கடி தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். கும்மிருட்டால், பெண்கள் இச்சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே, மேம்பால பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.