உயர்மட்ட நடைபாலத்தில் லிப்ட்களை இயக்க எதிர்பார்ப்பு
வண்டலுார்: தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலான ஜி.எஸ்.டி., சாலையை, தேசிய நெடுஞ்சாலைத் துறை பராமரித்து வருகிறது. இதில், வண்டலுார் முதல் சிங்கபெருமாள் கோவில் வரையிலான 18 கி.மீ., துார ஜி.எஸ்.டி., சாலையில், ஏழு இடங்களில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. இந்த பேருந்து நிறுத்தங்களில், சாலையின் ஒரு முனையிலிருந்து எதிர் முனைக்கு பொதுமக்கள் செல்ல, சாலையின் நடுவே உள்ள மையத்தடுப்பு சுவரை கடக்க வேண்டும். இது பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பல இடையூறுகளை ஏற்படுத்தி வந்த நிலையில், குறிப்பிட்ட ஏழு இடங்களிலும், தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில், உயர்மட்ட நடைபாலம் அமைக்க, கடந்த ஆண்டு முடிவு செய்யப்பட்டது. அதன்படி, வண்டலுார் இரணியம்மன் கோவில், வண்டலுார் ரயில் நிலையம், கிளாம்பாக்கம் டெக் பார்க், வள்ளியம்மாள் பொறியியல் கல்லுாரி, காட்டாங்கொளத்துார் சந்திப்பு, மறைமலை நகர் சந்திப்பு, சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையம் ஆகிய ஏழு இடங்களில், உயர்மட்ட பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, 2024ல் பணிகள் துவங்கப்பட்டன. இதில், சிங்கபெருமாள் கோவில் தவிர்த்து, மற்ற ஆறு இடங்களில் உள்ள உயர்மட்ட நடைபாலம் கட்டுமான பணிகள், கடந்த ஆக., மாதம் முடிந்து, தற்போது பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில், உயர்மட்ட நடைபாலத்தில் மாற்றுத்திறனாளிகள், முதியோர் பயன்பாட்டிற்காக நிறுவப்பட்டுள்ள மின் துாக்கிகளை, இன்னும் பயன்பாட்டிற்கு கொண்டுவரவில்லை. இதனால், மாற்றுத் திறனாளிகள், முதியோர், பெண்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, விரைவில் இந்த மின் துாக்கிகளை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென எதிர்பார்க்கின்றனர். தர சான்றுக்கு காத்திருப்பு தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்த உயர்மட்ட நடைபாலங்கள், சாலையின் இருபக்க இணைப்பிற்கு ஏற்ப, 150 அடி நீளம் முதல் 158 அடி நீளம் வரை, முழுதும் இரும்பினால் அமைக்கப்பட்டுள்ளன. உயரம், தரை மட்டத்திலிருந்து 18 அடி அளவில் அமைக்கப்பட்டு உள்ளதால், கன்டெய்னர் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் இடையூறின்றி பயணிக்கும். தவிர, அகலம் 10 அடி அளவில் உள்ளதால், பொதுமக்கள் நெருக்கடியின்றி நடந்து செல்ல முடியும். ஏழு பாலங்களும் 13.59 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகள், முதியோர், குழந்தைகள், பெண்கள் எளிதாக பாலத்தில் ஏறி, சாலையைக் கடக்க, அனைத்து பாலங்களிலும் மின் துாக்கி வசதி செய்யப்பட்டுள்ளது. மின் துாக்கிகளில் ஒரே நேரத்தில், 16 நபர்கள் பயணிக்க முடியும். மின் துாக்கிகளை நிறுவும் பணிகளும் முடிந்துவிட்டன. பாதுகாப்பு உள்ளிட்ட ஆய்விற்காக மத்திய, மாநில அரசுகளின் தரச் சான்றுகளை பெற்ற பின், மின் துாக்கிகள் பயன்பாட்டிற்கு வரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.