மதுராந்தகம் அருகே போலி டாக்டர் கைது
மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே, மருத்துவம் படிக்காமல், கிளினிக் நடத்திய போலி டாக்டரை நேற்று, போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே கருங்குழி அடுத்த மேலவளம்பேட்டையில், ஒரு வீட்டில், போலி மருத்துவர் ஒருவர், கிளினிக் வைத்து சிகிச்சை அளித்து வந்துள்ளார். இதுகுறித்து காஞ்சிபுரம் குற்ற தடுப்பு நுண்ணறிவு பிரிவு அலுவலகத்துக்கு புகார் வந்தது. நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளர் தலைமையில், மேலவளம் பேட்டையில் உள்ள, பிரைட் ஹெல்த் சென்டர், கிளினிக்கில் நேற்று ஆய்வு செய்தனர். கிளினிக்கில் இருந்த பிரகாஷ், 48, என்பவர் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார். போலீசார் அவரை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: பிரகாஷ் பிளஸ் 2 வரை மட்டுமே பயின்றுள்ளார். மருத்துவம் படிக்காமல், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக, மதுராந்தகம் அடுத்த புழுதிவாக்கம் மற்றும் கருங்குழி பகுதியில் கிளினிக் நடத்தி சிகிச்சை அளித்து வந்துள்ளார். கிராம மக்கள் அளித்த தகவலின்படி அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு போலீசார் கூறினர்.