வாக்காளர் திருத்த படிவம் வாங்க மறுத்த குடும்பம்
வண்டலுார்: வண்டலுாரில், வாக்காளர் திருத்த படிவத்தை வாங்க மறுத்த குடும்பத்தால், சலசலப்பு ஏற்பட்டது. வண்டலுார் ஊராட்சி, 15வது வார்டு, சரஸ்வதி நகரிலுள்ள வள்ளலார் பிரதான தெருவில், தன் தாயுடன் வசித்து வருபவர் ரமேஷ், 32. இவரது வீட்டிற்கு நேற்று மாலை 4:00 மணியளவில், வாக்காளர் தீவிர திருத்த படிவத்தை வழங்க, அரசு அலுவலர் ஒருவர் சென்றுள்ளார். அவரிடமிருந்து படிவத்தை வாங்க மறுத்த ரமேஷ், அலுவலரை திருப்பி அனுப்பிஉள்ளார். இதுகுறித்து, ரமேஷ் கூறியதாவது: இதே தெருவில் 25 ஆண்டிற்கும் மேலாக வசிக்கிறோம். சிறு மழைக்கே தெருவில் நீர் தேங்கி, நடக்கவே சிரமமாக உள்ளது. இரவில் தெரு விளக்குகள் ஒளிர்வதில்லை. கழிவுநீர் செல்ல வழியில்லாததால், வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், தெருவில் பாய்ந்து சுகாதார சீர்கேடு நிலவுகிறது. மழைநீர் வடிகால், கழிவுநீர் கால்வாய் கட்டித் தரும்படி, ஊராட்சி நிர்வாகத்திடம் 15 ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும், இதுவரை செவிசாய்க்கவில்லை. ஒவ்வொரு முறை தேர்தலின் போதும் இந்த பிரச்னையை தீர்ப்பதாக கூறும் வேட்பாளர்கள், அதன் பின் கண்டு கொள்வதில்லை. இதனால், வாக்காளர் திருத்த படிவத்தை வாங்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.