உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அரசு விரைவு பேருந்து ஓட்டுனர்கள் கிளாம்பாக்கத்தில் திடீர் போராட்டம்

அரசு விரைவு பேருந்து ஓட்டுனர்கள் கிளாம்பாக்கத்தில் திடீர் போராட்டம்

கூடுவாஞ்சேரி, அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்தில் பயணிக்க விடாமல், பயணியரை திட்டமிட்டு ஆம்னி பேருந்தில் பயணிக்கும்படி செய்யப்படுவதாக, கிளாம்பாக்கத்தில் அரசு விரைவு பேருந்து ஓட்டுனர்கள், திடீர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.சென்னை, புறநகர் பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு வருகின்றனர்.அங்கிருந்து, தயார் நிலையிலுள்ள,'பேட்டரி' வாகனத்தில் அல்லது இலவச சிற்றுந்து பேருந்தில் ஏறி, கிளாம்பாக்கம் பேருந்து முனைய நுழைவாயில் பகுதியில் இறங்கிச் செல்வது வழக்கம். இந்நிலையில் சில நாட்களாக, பேட்டரி வாகனத்தில் அழைத்து வரும் பயணியரை, தனியார் ஆம்னி பேருந்துகள் நிற்கும் இடத்தில் இறக்கி விடுவதாகவும், பயணியர் ஆம்னி பேருந்தில் பயணம் செய்வதால், அரசு பேருந்தில் பயணியர் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், அரசு விரைவு பேருந்து ஓட்டுனர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.மேலும், மாநகரப் பேருந்தில் வந்து இறங்கி, அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு செல்லும் நடைமேடை எண் ஒன்று, மாநகர பேருந்து நிலையத்தின் மிக அருகில் இருக்கும்.இதை பயணியர் பயன்படுத்த முடியாதபடி, பராமரிப்பு பணி என காரணம் தெரிவித்து, திடீரென பாதையை மூடியுள்ளனர். இதனால், அப்பகுதி வழியாக செல்ல முடியாத பயணியர், மாற்றுப் பாதையில் செல்லும் போது, அங்குள்ள தனியார் ஆம்னி பேருந்தில் பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதை கண்டித்து, அரசு விரைவு போக்குவரத்து கழக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள், கிளாம்பாக்கத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த புகாரின்படி கிளாம்பாக்கம் போலீசார் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதால், அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் நேற்று காலை சிறிது நேரம், கிளம்பாக்கம் பேருந்து முனையத்தில் சலசலப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை