உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / 1 கோடி ரூபாயில் ஆரோக்கிய உணவு வீதி திட்டம் மாமல்லையில் டெண்டரோடு முடங்கிய பணிகள்

1 கோடி ரூபாயில் ஆரோக்கிய உணவு வீதி திட்டம் மாமல்லையில் டெண்டரோடு முடங்கிய பணிகள்

மாமல்லபுரம், மாமல்லபுரத்தில் மத்திய சுகாதார துறை சார்பில், 2023ல் ஆரோக்கிய உணவு வீதி திட்டம் 1 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட்டது. இதற்கு சுற்றுலா துறை அனுமதி வழங்காததால், டெண்டர் விட்டதோடு பணிகள் முடங்கியுள்ளன.இந்தியாவில் உள்ள பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் உள்ளிட்ட புகழ்பெற்ற சுற்றுலா பகுதிகளில், உள்நாடு, சர்வதேச பயணியர், அதிகளவில் திரள்கின்றனர். அத்தகைய சுற்றுலா பகுதிகளில், தரமான உணவை எதிர்பார்க்கின்றனர். இது ஒருபுறமிருக்க, பயணியரை, இந்திய பாரம்பரிய உணவு வகைகளையும் விரும்பி சுவைக்கின்றனர். அந்தந்த மாநில பகுதிகளில், குறிப்பிட்ட பகுதிக்கென பாரம்பரிய உணவு வகைகள் உண்டு.ஆனால், பயணியருக்கு அளிக்கப்படும் உணவில், தரம், சுகாதரம், ஆரோக்கியம் இல்லாததாக புகார்கள், எழுகின்றன. எனவே, உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த, சுகாதார தர உணவு வழங்குவது கருதி, மத்திய சுகாதார அமைச்சகம், நாடு முழுவதும், 100 சுற்றுலா பகுதிகளில், ஆரோக்கிய மற்றும் சுகாதார உணவு வீதி திட்டத்தை செயல்படுத்த, கடந்த 2023ல் முடிவெடுத்தது.தேசிய சுகாதார இயக்கத்தின்கீழ், இத்திட்டத்தை செயல்படுத்த, இந்திய உணவு பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம், வீட்டுவசதி, நகர்ப்புற அமைச்சகம் ஆகியவற்றிடம் ஆலோசனை பெறப்பட்டது. உணவு பாதுகாப்புத்துறை வாயிலாக செயல்படுத்த, ஒரு இடத்திற்கு ஒரு கோடி ரூபாய் அளிக்கிறது.மாமல்லபுரத்தில், கடற்கரை பகுதியில் செயல்படுத்த, அதே ஆண்டு திட்டமிடப்பட்டது. இதற்கிடையே, கடற்கரை கோவில் அருகில், மத்திய அரசின் சுவதேஷ் தர்ஷன் 2.0 திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் ஏற்படுத்தப்பட உள்ள பயணியர் அடிப்படை வசதிகள், உணவு வீதி திட்டத்திலும் இடம் பெற்றதால், ஆரோக்கிய உணவு வீதி திட்டத்தை வேறிடத்தில் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டது.பின் சுற்றுலா பகுதி கருதி, இப்பகுதிக்கே மீண்டும் மாற்றப்பட்டது. முதல்கட்ட நிதியாக, 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. பேரூராட்சி நிர்வாகம், கடற்கரை கோவில் அருகில், 24.25 லட்சம் ரூபாய் மதிப்பில், சிமெண்ட் கல் சாலை அமைக்க, கடந்த ஆண்டு ஒப்பந்தம் அளித்தது. ஒப்பந்ததாரர் பணிகளை துவக்க முயன்றபோது, திட்ட பகுதி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக இடம் என தெரிவித்து, அந்நிர்வாகம் அனுமதிக்க மறுத்தது.இத்தகைய நிர்வாக சிக்கல்கள், குளறுபடி சர்ச்சையால், திட்டத்தை வேறிடம் மாற்ற பரிசீலிக்கப்பட்டது. பின் மீண்டும் இங்கேயே செயல்படுத்த முடிவெடுத்தும், கிடப்பில் உள்ளது. மாநில அரசு துறையினர், இதுபோன்ற முக்கிய திட்டங்களை, தொல்லியல் துறை, சி.ஆர். இசட்., எனப்படும் கடலோர ஒழுங்கமைவு விதிமுறைகளில் கவனமின்றி திட்டமிடுவது, முறையான அனுமதி, தடையில்லா சான்று பெற இயலாத சிக்கல் உள்ளிட்ட காரணங்களால், பின்னர் கைவிடுவது என இழுபறியாகி, திட்டங்கள் கேள்விக்குறியாகி உள்ளது.பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:உணவு வீதி, சுற்றுலா வளர்ச்சிக் கழக இடத்திலும் அமைகிறது. அந்நிர்வாகமோ அனுமதிக்க மறுத்து விட்டது. ஒப்பந்தம் அளித்தும் பணிகளை துவக்க முடியவில்லை. உயரதிகாரிகள் தான் முடிவெடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

உணவு வீதி திட்டத்தில் வசதிகள்

நடமாடும் ஸ்டீல் கடைகள் 50ஆழ்துளை கிணறு, குடிநீர் சுத்திகரிப்பு மையம் தலா 1கருங்கல் இருக்கைகள் 25சோலார் விளக்குகள் 25தகவல் பலகைகள் 15கடற்கரை பகுதி சிமெண்ட் கல் நடைபாதை 200மீ.,மிருக உருவ குப்பைத் தொட்டிகள் 50தற்காலிக நடமாடும் கழிப்பறைகள் 10


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ