மேலும் செய்திகள்
கடலோரம் வீசும் காற்று 90 கி.மீ., வேகம்
30-Nov-2024
இன்று கரைகடக்க உள்ள புயல், மழை பாதிப்புகளை தடுக்கும் வகையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்துறை அதிகாரிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளனர். அச்சறுத்தல் ஏற்படுத்தி வரும் விளம்பர பதாகைகள், கடைகளின் பெயர் பலகைகள் அகற்றப்பட்டு வருகின்றன. சென்னையின் பிரதான சாலைகளான ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., சாலைகள் மூடப்பட்டு உள்ளன. பூங்கா மற்றும் கடற்கரை பகுதிகள் மூடப்பட்டு, பொதுமக்கள் வருகை தடை செய்யப்பட்டுள்ளது.வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளதால், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த காற்றுடன் மிதமான தொடர் மழை பெய்து வருகிறது. இன்று, 90 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என்றும், 20 செ.மீ.,க்கும் அதிகமாக கன மழை பெய்யக்கூடும் என ரெட் அலெர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.புயல், மழை பாதிப்புகளை தடுக்க, பல்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். குறிப்பாக, பலத்த காற்று வீசும் என்பதால், சென்னை முழுதும் உயிர்பலி கேட்டு அச்சறுத்தி வரும் விளம்பர பதாகைகள், அதை தாங்கும் சட்டகம், கடைகளின் பெயர் பலகைகளை அகற்ற உத்தரவிடப்பட்டது.அதன்படி, அனுமதி பெற்றும், அனுமதியின்றியும் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான விளம்பர பதாகைகளை, நேற்று காலை முதல் ரோந்து பணிக்கும் செல்லும் அந்தந்த பகுதி போலீசார் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில், கன மழையின் போது பாதிக்கப்படும் பகுதிகளில், மக்களை மீட்பதற்கான முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன என, கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை;வங்கக்கடலில் உருவாகியுள்ள பெஞ்சல் புயல் காரணமாக, நேற்று முதல் வரும் டிச., 1ம் தேதி வரை, செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில், கன மற்றும் மிக கனமழை பெய்ய உள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.மாவட்டத்தில், வெள்ள நீரால் பாதிக்கப்படக்கூடிய தாழ்வான பகுதிகளாக, 390 பகுதிகள் கண்டறியப்பட்டு, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் உள்ள, பொதுமக்களை மழைக்காலங்களில் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க, 290 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும், 15 மண்டல அலுவலர்களை கொண்ட, 33 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.துணை கலெக்டர் நிலையில், வட்ட அளவிலான கண்காணிப்பு குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து துறைகளிலும், வெள்ள தடுப்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன.வெள்ள பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்க, 4,500 தன்னார்வலர்கள், மாவட்ட, கோட்ட மற்றும் வட்டார அளவில் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். கடலோர பகுதிகளில் வசித்துவரும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் TN Alert செயலியை பதிவிறக்கம் செய்து, அதன் வாயிலாக இயற்கை இடர்பாடுகள் குறித்த முன்னெச்சரிக்கை செய்திகளை அறியலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடல் சீற்றம் மற்றும் அலை காரணமாக, முகத்துவாரங்களில், மணல் மற்றும் திட கழிவுகளால் அடைப்பு ஏற்படுகிறது. இதனால், வெள்ளநீர் வெளியேறுவதில் தாமதம் ஏற்பட்டால், சென்னை நகரில் சேதம் அதிகரிக்கும். இதன் தாக்கம் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் ஏற்படும்.வங்க கடலில் புயல் உருவாகியுள்ள நிலையில், வெள்ளநீரை வெளியேற்றுவதற்கு வசதியாக, முகத்துவாரங்களில் தொடர்ந்து துார்வாரும் பணிகளை மேற்கொள்ள நீர்வளத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக பொக்லைன் வாகனங்கள் அங்கு தயாராக நிறுத்தப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை நீர்வளத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதேபோல, திருவள்ளூர் மாவட்டத்தில் பயணிக்கும் ஆரணியாறு முகத்துவாரத்திலும், பழவேற்காடு அருகே, துார்வாரும் பணி கண்காணிக்கப்பட்டு வருகிறது.
புயலின் தாக்கம், அடுத்த மூன்று நாட்களுக்கு இருக்கும் என்பதால், இன்று முதல் டிச., 2ம் தேதி வரை விசைப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் யாரும், கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என, மீன்வளத் துறை அறிவுருத்தியுள்ளது. சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள எல்லா பூங்காக்களையும் மூட, மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதேபோல், மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகளில் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. வண்டலுார் உயிரியல் பூங்காவில், பார்வையாளர்கள் வருவதை தடுக்க, பூங்கா மூடப்படுவதாக, அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பாசன ஏரிகளிலும் 30 சதவீதத்திற்கு குறைவாக நீர்இருப்பு உள்ளது.இதனால், சென்னையின் குடிநீர் மட்டுமின்றி பாசன தேவையை பூர்த்தி செய்வதிலும் சிக்கல் நீடித்து வந்தது. இந்நிலையில், இன்று இம்மாவட்டங்களில் கனமழை வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, இம்முறை குடிநீர் மற்றும் பாசன ஏரிகள் நிரம்பும் என்ற நம்பிக்கையில் நீர்வளத்துறையினர் உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், பொதுமக்கள், இயற்கை இடர்பாடுகள் குறித்த புகார்களை, கலெக்டர் அலுவலகத்தில் இயங்கிவரும் அவரச கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் மற்றும் வாட்ஸாப் வாயிலாக, எளிதில் உடனுக்குடன் தெரிவிக்கலாம்.கட்டமணமில்லா தொலைபேசி எண் 1077தொலைபேசி 044 - 2742 7412, 2742 7414மொபைல் போன்: 94442 72345
காரைக்கால் - மாமல்லபுரம் இடையே, இன்று பெஞ்சல் புயல் கரையை கடக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக, கடலில் சீற்றம் அதிகரித்து கொந்தளிப்புடன் காணப்படுகிறது.இன்று அமாவாசை என்பதால், சீற்றம் மேலும் அதிகரிக்கும். கடல்நீர் உட்புகுந்து படகுகள், வலைகள் ஆகியவற்றை இழுத்துச்செல்லாமல் தவிர்க்க, மீனவர்கள், அவற்றை பாதுகாப்பான மேட்டுப் பகுதிக்கு இடம் மாற்றினர்.- நமது நிருபர் குழு -
30-Nov-2024