உயர்கோபுர மின்விளக்கு பழுது சுகாதார நிலையம் முன் கும்மிருட்டு
செய்யூர்:பவுஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையம் முன் பழுதடைந்துள்ள உயர்கோபுர மின்விளக்கை சீரமைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பவுஞ்சூர் பஜார் வீதியில், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. இது விழுதமங்கலம், கடுகுப்பட்டு, பச்சம்பாக்கம் போன்ற 20க்கும் மேற்பட்ட கிராம மக்களின் பிரதான அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக உள்ளது. தினமும், நுாற்றுக்கணக்கான மக்கள் மருத்துவ சேவைகளுக்காக வந்து செல்கின்றனர். இந்த ஆரம்ப சுகாதார நிலைய நுழைவாயில் பகுதியில், உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், முறையான பராமரிப்பு இல்லாமல், கடந்த இரண்டு ஆண்டுகளாக பழுதடைந்து, அப்பகுதியில் இரவில் கும்மிருட்டாக உள்ளது. இதன் காரணமாக, இரவு நேரத்தில் சுகாதார நிலையத்திற்கு வருவோர், அச்சத்துடன் வந்து செல்கின்றனர். எனவே, பவுஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையம் முன் பழுதடைந்துள்ள உயர்கோபுர மின்விளக்கை சீரமைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.